Search This Blog

Jan 26, 2012

சிவவாக்கியம் (541-545) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (541-545)

 சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -541

நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று
ஊரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினிற் உனக்கு ஞான சித்தி செய்வேன் பாரென
நேரினிற் பிறர் பொருளை நீளவுங் கைப்பற்றுவர்.        
           

நீர்மேல் நிற்கும் குமிழியைப் போன்றது நிலையில்லாத உடம்பு இது என்று ஞானம் பேசி, தாங்களே அவதாரமாக வந்த உ
ண்மையான குருவென்று ஊர் முழுவது பறையடித்து பிரச்சாரம் செய்து உண்மைப்பொருள் அறியாத உதாரியாய் திரியும் போலிக் குருவானவர் ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என அழைப்பு விடுத்து ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி அதற்கு நிகராக பிறர் பொருளை கட்டணம் என்று கட்டாயமாக வசூல் செய்து வாழ்நாள் முழுதும் நெடுக கைப்பற்றுவார்கள். இவர்களை கண்டு ஏமாறாதீர்கள். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -542
காவியுஞ் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலைய விட்டுத் தேசமெங்குஞ் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.

காவி ஆடை, சடாமுடி, கமண்டலம், மான் தோல் ஆசனம், கழுத்திலும் உடம்பிலும் உருத்திராட்சம் யோகத்தண்டு இவைகளைக் கொண்டு சாமியார் வேடம் போட்ட சோம்பேறி மாடுகளான மனிதர்கள், தங்கள் மனைவியை தவிக்கும்படி அலையவிட்டு விட்டு தேசமெங்கும் சுற்றி பிச்சை எடுப்பார்கள். அதனால் பாவியாகி சோற்றுக்காக வீடெல்லாம் சென்று அம்மா தாயே பசி என்று கேட்டு அலைவார்கள். 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -543
முத்தி சேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லி அங்கும் சாமி வேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ் நரகில் வீழ்வரே. 
                       
ஜீவன் முக்தி அடைவதற்குள்ள சித்தியை இங்கு முன்னதாக உடனே நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் சொல்லி சாமி வேடம் பூண்டவர், நித்தியம் தன் வயிறு வளர்க்க பல நீதிக் கதைகளையும் சொல்லி ஞானப் பொருளறியாமல் ஞானம் பேசிப் பேசியே குருபக்தியை எடுத்துரைத்து பணத்தை பறிப்பார்கள். யோக ஞானத்தை விலை வைத்து விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.     
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 544
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில் பாதகுறடு செய்தழிக்
கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

செம்மை மிகுந்த பழமையான மரத்தில் சிலைகளையும் தலைகளையும் செய்து வணங்குகின்றீர்கள். கொம்பில்லாத அம்மரக்கிளையில் பாதக் குறடுகள் செய்து காலில் போட்டு அழிக்கிறீர்கள். கையெடுத்து வணங்கியதும் காலில் போட்டு மிதித்ததும் ஒரே மரத்தில் ஆனது தானே. உங்களுக்குள்ளே சோதியாக விளங்கும் ஈசனை அறிந்து அவனையே நாடியிருந்து நோக்கி தியானிக்க வல்லவரானால் இம்மலமான உடம்பில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் எக்குற்றங்களும் இல்லாது மனத்தூய்மை பெறுவீர்கள். மாசற்ற மனதில் ஈசன் வாழ்வான்.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 545
எத்திசை எங்கெங்குமோடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலை முழுகச் சுத்த ஞானி யாவரோ
பக்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தியின்றிப் பாழ் நரகில் மூழ்கி நொந்தலைவரே.  

எல்லாத் திசைகளுக்கும் சென்று எங்கெங்கும் ஓடி சுற்றி வந்தாலும் எண்ணற்ற புண்ணிய நதிகளில் தலை முழுகுவதாலும் சுத்த ஞானியாக ஆக முடியுமோ! மெய்பக்தியோடு மெய்ப்பொருளை அறிந்து அரன்பதம் பணிந்திடாத பாவிகளே! மெய்ப்பொருளை அறிந்து தவம் செய்து உணர்ந்தால் தான் சுத்த ஞானி ஆக முடியும். இதைவிடுத்து அலைவதால் முக்தி கிடைக்காது. பாழும் நரகத்தில்தான் மூழ்கி நொந்து போவீர்கள். ஆதலால் மெய்ப்பொருளை அறிந்து தியானியுங்கள்.              

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!