Search This Blog

Jan 26, 2012

சிவவாக்கியம் (546-550) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (546-550)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -546

கல்லு வெள்ளி செம்பிரும்பு கைச்சிடும் தராக்களில்
வல்ல தேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடின்
தொல்லையற்றிடப் பெருஞ் சுகம் தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை.

            
கல்லிலும், வெள்ளி, செம்பு, இரும்பு என்று காய்ச்சிடும் தராக்களிலும் வல்லமையுள்ள தெய்வ உருவங்களை பலவித பேதங்களில் அமைத்து அங்கு போற்றி வழிப்பட்டாலும் தொல்லையற்று இருக்க முடியமா? அது உண்மையில் பெருஞ்சுகமாகிய இறை இன்பத்தை தருமோ சொல்லுங்கள். உங்களில் உள்ள சோதியில்தான் மெய்யின்பம் பெற முடியுமேயன்றி வேறு வகைகளில் போற்றுவதனால் இல்லையென்று ஈசன் மீது ஆணையிட்டு சொல்கின்றேன். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -547
இச்சகஞ் சனித்ததுவும் ஈசனைந் தெழுத்திலே
மெச்சவுஞ் சராசரங்கள் மேவுமைந்தேழுத்திலே
உச்சிதப் பல உயிர்கள் ஒங்கலஞ் செழுத்திலே
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்குமைந்தெழுத்திலே.

இந்த உலகம் தோன்றியது ஈசனுடைய நமசிவய என்ற அஞ்செழுத்தாலே, அனைத்து மேலான சராசரங்கள் யாவிலும் மேவியிருப்பது ஐந்தெழுத்தே. சத்தியமான மெய்ஞ்ஞானப் போதப்பொருளாக நிற்பதும் ஐந்தெழுத்தே. ஆனதால் ஐந்தெழுத்தை ஓதி ஐந்தெழுத்தின் உண்மைகளையும் பஞ்சபூத தன்மைகளையும் உணர்ந்து, ஐந்தெழுத்தே பஞ்சாட்சரமாகிய மெய்ப் பொருளாக இருப்பதை இருந்து அதையே நோக்கி தியானித்து ஈசன் அருள் பெறுங்கள்.  
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -548
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்துத் தாங்குருடாவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்காள்
பாத்திர மறிந்து மோன பத்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தராவர் அங்
னே.

      .                         
சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அதன்படியே நடந்து வந்தும் மெய்யறிவை அறியாமல் தாங்கள் குருடாகி இருளிலேயே இருக்கின்றீர்கள். கண்கள் கெட்டுப் போகும்படி உச்சி வெயிலில் சூரியனை நேராகப் பார்த்து மந்திரங்களை ஓதி துதி செய்யும் முட்டாள்களே! பக்குவப்பட்டு பாத்திரமாக இருக்கும் உயிரை அறிந்து, அதுவே மோனம் என்ற மெய்ப் பொருள் என்பதை உணர்ந்து, அதையே ஈசன் திருவடி எனப் பற்றி பக்தியுடன் தியானம் செய்ய வல்லவர் ஆனால், சாஸ்திரங்களின் சூத்திரப்படி, அதைத் தெரிந்தவர்கள் யாவரும் சுத்த ஞானியாக ஞானியாக ஆவார்கள். .      
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 549
மன உறுதி தான் இலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினமும் ஊரெங்குஞ் சுற்றித் திண்டிக்கே அலைபவர்
இளமதிற் பலர்கள் வையும் இன்பற்ற பாவிகாள்.

தன்னிடம் மனதில் திட நம்பிக்கையுடன் இறைவனை எண்ணி தியானம் செய்ய வேண்டும். மனதில் உறுதியில்லாத மடமந்தை கொண்ட மாடுக்களைப் போன்று வாழ்ந்து கொண்டு பிணமாகப் போகும் மனிதர்களே! கோபம் அடைவார்கள். பிறர் பொருளை ஏமாற்றி சேகரித்து வைத்து யாருக்கும் சொல்லாமல் எதற்கும் பயனின்றி இறந்து போவார்கள். தினந்தோறும் ஊரெல்லாம் சுற்றி சோற்றுக்கு அலைபவர்கள் மெய்யின்பத்தை அறியா பாவிகள். இவர்களை வருங்காலம் தூற்றும் ஆதலால் இளமையிலேயே உண்மையை உணர்ந்து மனத்தில் உறுதியுடன் செத்தாலும் வைத்த அடி மாறாத திடநம்பிக்கையுடன் ஈசனைத் தியானித்திடுங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 550
சிவாய வசியென்னவுஞ் செபிக்க இச்சகமெலாம்
சிவாய வசியென்னவுஞ் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாய வசியென்னவுஞ் செபிக்க வானமாளலாம்
சிவாய வசியென்பதே இருதலைத் தீயாகுமே. 


சிவாய வசி என்று ஓதி செபிக்க இந்த சகம் எல்லாம் நம் வசம் ஆகுமே. சிவாயவசி என்று எண்ணி மனதிலேயே செபித்து தியானிக்க யாவும் சித்தியாகுமே. சிவாய வசி என வாசியேற்றி செபிக்க ஆகாயதலத்தில் ஆண்டவனைச் சேர்ந்து தேவர்களாகி வானம் ஆளலாம். சிவாய வசி என்பது இருதலைத் தீயாகி அதுவே சோதியான ஈசன் ஆகும்.
   
***************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன், கண்டு படித்து இன்புற்ற அன்பு நண்பர்களே!!! இத்துடன் சிவவாக்கியரின் பாடல் பதிவு முற்றுப் பெற்றது. இப்பாடல் பதிவுகளை (கிரமமாக- இணைப்புக்களுடன் தொகுத்து இறுதிப் பதிவு நாளை வெளியிடப்படும்) வேண்டும் அன்பர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளவும். http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!