Search This Blog

Jan 26, 2012

சிவவாக்கியம் (536-540) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (536-540)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -536

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேம நிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பதுண்மையே.      
           

பூசைகளைப்போட்டு நேம நிட்டைகளோடு மற்றவர் பார்த்து வியப்படைய பூரித்து நடிக்கும் பாதகர்கள் ஆசை கொண்டு அனுதினமும் அன்னியர் பொருள்களை அபகரித்து மோசம் செய்வதற்கே முற்றிலும் அலைகின்றனர். அவர்களுக்கு இவ்வுலகில் ஏமாற்றுவதால் பொருளோடு வாழ்ந்திருந்தாலும், அதனால் இக்காசியினில் ஏழு பிறப்பும் நரகம் காத்திருப்பது உண்மையாகும். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -537
நேசமுற்று பூசை சித்து நீறு பூசிச் சந்தானம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய் புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி கலம்புரண்ட வெண்ணீராகும் மேனியே.

ஈசன் மீது மிகவும் அன்புற்று இருப்பது போல் நடித்துக் கொண்டு அன்றாடம் பூசைகள் செய்து உடல் நிறைய விபூதியை தரித்து வாசமுடைய சந்தனத்தை உடம்பு முழுதும் அணிந்து கொண்டு நெற்றியில் அஞ்சன மையினால் கறுப்புத் திலகமிட்டு மற்றவர் மதிக்க பெரிய பக்தராக வேடமிட்டு மோசம் பொய் புனைசுருட்டு போன்ற அத்தனை திருட்டுத் தனங்களையும் செய்து வாழ்ந்து வரும் மூடர்களே! அதனால் வரும் வினை என்ன தெரியுமா?  போர்க்களத்தில் வெட்டுப்பட்டு ரண வேதனையால் புரளும் குதிரையைப் போல் உங்கள் உடம்பில் ரண வேதனைகள் உண்டாகி கொதிக்கும் வெந்நீரைப் போல் மேனி கொதித்து துன்பத்தில் உழல்வீர் எச்சரிக்கை.
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -538
வாதஞ்செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவேனச்
சாதனை செயதெத்திச் சொத்துத் தந்ததைக் கவர்ந்துமே
காத தூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.  
                       
நான் இரும்பைச் தங்கமாக்கும் வாதவித்தை செய்வேன் வெள்ளியும் பொன்னும் பத்தரை மாற்று தங்கமும் செய்ய சாகாத வேகாத போகாத குருமருந்து செய்ய வேண்டும். அந்த குரு செய்து முடிக்க ஒரு மண்டல காலம் ஆகும். அதற்கு வேண்டிய பொன்னும் பணமும் தாருங்கள். உங்களை இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரனாக மாற்றுவேன் என ஆசை காட்டி எத்தாகப் பேசி ஏமாற்றி வாக்கிய சொத்துக்களை கவர்ந்து கொண்டு வெகுதூரம் ஓடிவிடுவார்கள். அவர்களைத் திரும்பவும் காண்பதென்பது அருமையே. ஆதலால் இம்மாதிரியான போலி சித்தர்களை நம்பி ஆசையில் அகப்பட்டு ஏமாறாதீர்.      
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 539
யோக சாடை காட்டுவார் உயரவும் மெழும்புவார்
வேகமாக அட்ட சி
த்து வித்தை கற்று நெட்டுவார்
மோகங் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப் பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே. 

மற்றவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என்று யோக சாடைகளை செய்து காட்டுவார்கள். தரையிலிருந்து உயரவும் எழுவார். வெகு வேகமாக சித்து விளையாட்டுக்களை கற்று அதனைச் செய்து வித்தைக் காட்டி வியப்படையச் செய்வார். இதனால் மாயையில் அகப்பட்டு காம ஆசையினால் மோகங் கொண்டு பெண்களில் சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்வார். அதன் பின் உண்மையான யோக ஞானத்தை இழந்து பெண்ணாசையால் பேய் பிடித்தவர் போல அலைந்து இப்பேருலகில் சாவார்கள். ஆகையால் சித்து வித்தைகளை விட்டு அவைகளில் நாட்டமில்லாது மெய்ஞானத்தில் நில்லுங்கள்.         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 540
காய காய முன்பதாகக் கண்டவர் மதித்திட
மாய வித்தை செய்வதெங்கு மடிப்பு மோசஞ் செய்பவர்
நேயமாக்கஞ் சாவடித்து நேரபிணியைத் தின்பதால்
நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே       
     

காயகற்பம் உண்டு கல்ப தேகம் பெற்றதாக, கண்டவர்கள் மதிக்கும்படி சொல்லிக் கொள்வார்கள். கற்பத்தினால் மற்றவர் கண்களில் படாது மாயமாய் மறையலாம், ககன மார்க்கத்தில் எங்கும் பறந்து செல்லலாம் என்று ஜாலமாகிப் பேசி மோசமான காரியங்கள் செய்வார்கள். அன்பு மார்க்கத்தை சாகடித்து விட்டு எந்நேரமும் அபினியை காயகற்பம் என்று தின்பார்கள். அதனால் பைத்தியம் பிடித்து நாயைப் போல சாக்கடை நீர நக்கி குடித்து நாட்டில் அலைவார்கள்.            

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!