Search This Blog

Oct 29, 2011

சிவவாக்கியம் (116-120) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (116-120)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -116

நாவினூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும்
பாவிகாள் இதென்ன மாயம் வாமநாடு பூசலை
ஆவியார் அடங்கு நாளில் ஐவரும் அடங்குவார்.
நாவில் பேச்சு அழிந்ததும், நலமுடன் வாழ்ந்த மனித குலம் அழிந்ததும், தான் பயன்படுத்தி மென்மையாக பாதுகாத்த வாகனங்கள் அழிந்ததும் இவைகளால் ஏற்படும் மன உளைச்சல்களால் இறை விசாரம் குறைந்ததும் இயற்கையாகவே எப்போதும் நடந்து வரும் மாயம் என்பதை அறியாமல் வாழும் பாவிகளே. வாமநாடு எனும் வலப்பக்கமாய் இருந்து உழன்ற நம் ஆன்மா போகும் நாளில் பஞ்சபூதங்களும் ஒவ்வொன்றாகவே மறைந்துவிடும்.
*************************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -117

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யரோடு பொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்றியிருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது
ஆடு பெற்றதவ்விலை பெறாது காணும் இவ்வுடல்.
உண்மையினையும் பொய்யினையும் பேசி சம்பாதித்து புது வீட்டைக் கட்டி யாகங்கள் செய்து குடி புகுந்து செல்வம், மக்கள், மனைவி, சுற்றத்தினர் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களே! உயிர் போகும் ஓலையின்படி உங்கள் உயிரை கொண்டு போக எமன் வந்து அழைத்துப்  போகும்போது அவையெல்லாம் கூட வருமா?ஒன்றுக்கும் உதவாமல் உதிர்ந்துபோகும் இலைகள் கூட ஆடு, மாடுகள் தின்பதற்காவது உதவும். ஆனால் இந்த உடலைவிட்டு உயிர்போய் விட்டால் ஒன்றுக்கும் உதவாது போகும் இவ்வுடல் என்பதை உணர்ந்து உங்கள் உயிரில் உள்ள ஈசனைக் கண்டு தியானியுங்கள்.
*************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -118

இல்லை இல்லை என்று நீர் இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ
இல்லை அல்ல ஒன்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே!!!
கடவுள் இல்லை, இல்லை என்று இயம்புகின்றவர்கள் எதுவும் இல்லா எழைகளாவார்கள். இல்லையென்றும், உண்டென்றும் சொல்லுமாறு தனக்குள்ளேயே நானாக நின்ற ஆன்மாவையும், ஆன்மாவில் ஆண்டவனையும், அறியாமல் இல்லை என்று சொல்ல என்ன ஆகுமோ? அது இல்லாததும் இல்லை, ஒன்றும் உள்ளதும் அல்ல. சக்தியாகவும், சிவனாகவும் இரண்டும் ஒன்றி நின்ற மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து, நினைந்து, தியானித்து சும்மா இருக்கும் சமாதிநிலை என்ற எல்லையைக் கண்ட தவசீலர்கள், மரணமில்லா பெருவாழ்வடைந்து இறைவனுடன் இரண்டறக் கலப்பார்கள். அவர்கள் இனி இம்மாயா உலகில் பிறப்பெடுக்க மாட்டார்கள்.
***************************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -119

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
எப்படி மாற்றிப் போட்டும் நாமசெபம் செய்தாலும் அது உண்மையை உணர்ந்தும். உண்மையாக உச்சரிக்கும் மந்திரங்களின் உட்கருத்து மாறாது. அது அகங்காரத்தை அழித்து தீரத்தைக் கொடுக்கும். உலகங்கள் யாவையும் காத்து ரட்சிக்கும் இறைவன், இராவண வதம் செய்யா போரில் நின்ற புண்ணியன், வாலியை வதம் செய்ய மாமரங்கள் ஏழையும் பானத்தில் துளைத்தவன் ராமன். அதுபோல நம் உடலில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா, சகஸ்ராரம் என்ற ஏழு சக்கரங்களையும் ஸ்ரீராம நாமத்தில் பரிசுத்தமாக்கி, அவைகளின் ஆற்றலால் தியானம், தவம் மேலோங்கி பிறவா நிலையடைய துணையாக நிற்பது ஸ்ரீராம நாமமே!!!!
***********************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -120

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!

இப்பூவுலகில்  பல பிறவிகள் எடுத்து பிறந்த இவ்வுடம்பை இது என்னுடையது என எண்ணி இருக்கின்றோம்!!! இது வீடுபேறு எனும் இன்பம் பெற வேண்டினால் கிடைக்குமா? அதற்கு நான்கு வேதங்களையும் நன்கு பாடிப் பழகி இவ்வுலகமெங்கும் இறை நிறைத்திருக்கும் இயல்பை அறிந்து தன உடம்பையும், உயிரையும் உணர்ந்து யோக ஞான நாட்டமுடன் தியானம் கடைபிடியுங்கள். அதற்கு உற்ற துணையாக வருவது ராமநாமம்!!! இராம நாமத்தில் ஓரெழுத்தும் ஓங்காரமும் உள்ளதை உணருங்கள்.
********************************* 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!