Search This Blog

Sep 28, 2011

சிவவாக்கியம் (061-065) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (061-065)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!! 


சித்தர் சிவவாக்கியர் சிந்தனை –061
அறத்திறங்களுக்கும் நீ அகண்டம் என்திசைக்கும் நீ
திறதிறங்களுக்கும் நீ தேடுவார்கள் சிந்தை நீ
உறக்கம் நீ உணர்வு நீ உட்கலந்த சோதி நீ
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே

ஈஸ்வரா! தர்மகாரியங்கள் யாவும் நீ, அகண்டங்கள் அனைத்துக்கும் எட்டு திசைகளுக்கும் காரணமானவன் நீ. உன்னை அடைய வேண்டும் என்று தேடுவோர்களின் சிந்தையிலும் மெய்யறிவாகவும் உள்ளவன் நீ. மெய் ஞானா விஞ்ஞானத் திறன்களுக்கும் அதில் ஆராய்ந்து சாதிக்கும் திறமைகளுக்கும் காரணம் நீ. தூக்கத்தில் கிடைக்கும் சுகம் நீ. உன்னை உணரும் உணர்வும் நீ ஏன் உடலில் உட்கலந்து நிற்கும் சோதியும் நே. கனவிலும், நனவிலும் மறக்கக் கூடாத நின் திருவடியை அடியேன் அறியாது மறந்து போனாலும் ஏன் உடலாகிய வீட்டில் மனத் தாமரையில் வந்து குடியிருந்து ஆண்டு கொள்.
*******************************************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -062
அண்டம் நீ அகண்டம் நீ ஆதிமூல மானோன் நீ
கண்டம் நீ கருத்தும் நீ காவியங்கள் ஆனோன் நீ
புண்டரீக மன்றுளே புனருகின்ற புண்ணியர்
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே.

நாராயணா! இவ்வுலகம் நீ அகண்டங்கள் யாவும் நீ. முதலையின் பிடியில் அகப்பட்ட கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே என்று அபயக்குரலிட்டு அலற அதனைக் காத்து ரட்சித்து அனைத்துக்கும் ஆதிமூலமாக ஆனவன் நீ. ஆபத்து வரும் காலத்தில் காப்பவன் நீ. ஏன் கருத்தினுள்ளே தெளிவாகத் திகழ்பவன் நீ. இதிகாச காவியங்களான மகாபாரதத்தின் நாயகன் நீ. ஆயிரம் இதழ் தாமரையான சகஸ்ரதளத்தில் நின்று யோக தியானம் செய்யும் புண்ணியோர்கள் புண்டரீகம் எனும் மைப் பொருளில் சேர்ந்து அதிலேயே தவ்வக்கோலம் பூண்டிருப்பர். நடுவாக அமைந்த கூர்மையொத்த இடத்தில் உன்னைக் கண்டு ஆனந்தம் பெற்று உன்னுடைய கூர்ம அவதாரத்தை எண்ணி ஆமையைப் போல் ஐம்புலன்களை உள்ளடக்கி சமாதி எண்டும் பேரின்ப நிலையை அடைவார்கள்.
******************************************************************

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -063
மை அடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்றிருப்பீர்கள்
மெய் அறிந்த சிந்தையால் விளங்கு ஞானம் எய்தினால்
உய்யரிந்து கொண்டு நீங்கள் ஊழிகாலம் வாழ்விரே
 மைத் தீட்டிய அழகிய கண்களை உடைய இளம் பெண்கள் ஆடவரை காம வலை வீசி வீழ்த்தி மயக்கிடும் பாழ்வாழ்வெனும் இம்மையையில் அகப்பட்டு வீணான சந்தேகங்களிலும், எம வேதனை பயத்தினாலும் பிடிக்கப்பட்டு நீங்கள் துன்பப்பட்டு வாழ்ந்து உழன்று வருகின்றீர்கள். உங்கள் உடம்பிலேயே உள்ள உயிரை அறிந்து அதில் விளங்கும் மெய்ப்பொருளை உணர்ந்து அதையே சிந்தையில் நினைந்து தியானியுங்கள். இதுவே இப்பிறவி உய்வடையும் வழி என்பத அறிந்து ஞானத்தினால் நீங்கள் தவம் புரிந்து வந்தால் மரணமிலாப் பெரு வாழ்வைப் பெற்று இறைவனோடு எக்காலமும் நித்தியமாய் வாழ்வீர்கள்.

******************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை-064
கருவிருந்த வாசலால் கலங்குகின்ற ஊமைகாள்
குருவிருந்து சொன்ன வார்த்தை குறித்து நோக்க வல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்று நீர்
திருவளங்கு மேனியாகிச் சென்று கூடலாகுமே
பெண்களின் மீதுள்ள சிற்றின்ப ஆசையால் ஆழிவில் ஏற்படும் பல துன்பங்களாலும், நோய்களாலும் பாதிக்கப் பட்டு வெளியில் சொல்ல முடியாமல் கலங்கித் தவிக்கும் ஊமை மக்களே!! நல்ல குருவாக இருந்து வாழ்ந்து காட்டியவர்கள் சொன்ன உபதேச வார்த்தைகளை நன்கு புரிந்து கொண்டு அந்த ஒன்றையே குறித்து நோக்கி தியானம் செய்ய வல்லவர்கலானால் அருவாக இருந்த அப்பொருளே உருவாக இலங்கி சோதி மேனியாகி நின்ற ஈசருடன்.ஒன்றாகி இணைக்கும். அதுவே உங்களை உத்தமராக ஆக்கி உள் தமரைத் திறந்து ஈசன் திருவாக விளங்கி திகழும் பொன் மேனியில் பொன்னம்பலத்தில் சென்று கூடி பேரின்பத்தை கூட்டி வைக்கும்.
**********************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை -065   
தீர்த்தம் ஆடவேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளித்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயம் அஞ்செழுத்துமே.

தலம், தீர்த்தம், மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படியெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா? பாவங்கள் அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா? அவ்வாறு அனைத்து பாவங்களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிலேயே பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள். 
**************************************************************************** 
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!