Search This Blog

Jan 25, 2012

சிவவாக்கியம் (521-525) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (521-525)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -521
நானுமல்ல நீயுமல்ல நாதனல்ல ஓதுவேன்
வானிலுள்ள சோதியல்ல சோதி நம்முள் உள்ளதே
நானும் நீயும் ஒத்த போது நாடிக் காணலாகுமே
தான தான தத்தான நாதனான தானனா    
           
 
நான் என்பதும் இல்லை, நீ என்பதும் இல்லை, நாதன் பார்த்து என்பதும் இல்லை எல்லாம் பரம்பொருள் என்றே சொல்லுவேன். வானிலுள்ள சந்திர சூரிய ஒளியில் அல்ல நம்முள் உள்ள மெய்ப் பொருளே சோதி. வானாகிய யகாரமும் நீயாகிய சிகாரமும் ஒன்றாக ஒத்து சோதியாக நின்றதை உணர்ந்து அதையே நாடி ஒரே நினைவாக நின்று தியானித்து கண்டு கொள்ளுங்கள். தானாக நின்ற அதுவே வத்துவான பொருளானதாகி நாதனான ஈசனே தானாகி ஆடிக் கொண்டிருக்கிறான்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -522
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான்
நல்லதென்ற போது அது நல்லதாகி நின்று பின்
நல்லதல்ல கேட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்று நாடி நின்ற நாமம் சொல்ல வேண்டுமே.  

நல்லதும் அல்ல கெட்டதுமல்ல நம் நடுவில் நிற்பது மெய்ப் பொருள்தான். அந்த ஒன்றை அறிந்து உணர்ந்த பிறகு நல்லதே நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் நல்லது தான் நடக்கும். நல்லதை எண்ணாமல் கெட்டதுதான் நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் கெடுதலே நடக்கும். அதலால் மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தவர்கள் அது நல்லதே தரும் என நாடி ஈசனை எண்ணி அவன் நாமத்தை சொல்லி தியானத்தில் இருக்க வேண்டும்.  
 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -523
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள் கற்ற நடனமாடம் நம்பன் வாழ்க்கை ஏதடா
தாய்கள் பாலுதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால்
நோய்கள் பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே.
                       
நமக்குள் நாய்கள் போல் சுற்றும் மனதிற்குள் நடனமாடும் நம் அப்பனான ஈசன் இல்லாது போய்விட்டால் நமக்கு வாழ்க்கை என்பது ஏது? இவ்வுடம்பிற்கு பிணம் என்று பேர் வைத்து பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் நாம் விரும்பாத சுடுகாட்டிற்குத் தான் கொண்டு செல்வார்கள். பெண்களை தாயாக பாவித்து அவர்களின் இளமையிலும், செழுமையிலும் ஏற்படும் காம இச்சையை தவிர்த்துவிட்டு அவனை தனக்குள்ளேயே நாடி யோக ஞானத்தால் தியானித்திருப்பவர்களுக்கு நோய்கள் பட்டு உழலும் துன்ப வாழ்க்கை ஏற்படாது. ஈசனையே நாடியிருந்து அவன் இருக்கும் இடத்தையே தியானம் செய்யுங்கள்.        
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 524
உப்பை நீக்கில் அழுகிப் போகும் ஊற்றையாகும் உடலில் நீ
அப்பியாசை கொண்டிருக்க லாகுமோ சொலறிவிலா
தப்பிலிப் பொய் மானங்கெட்ட தடியனாகும் மனமே கேள்
ஒப்பிலாச் செஞ்சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே.       

உப்பான பொருள் நீங்கினால் உயிர் போய் அழுகி நாற்றமடித்து ஊத்தையாகும் உடம்பில் நீங்கள் அபிப்பிராயம் வைத்து ஆசை கொண்டு இருப்பதால் பயன் ஏதும் ஆகுமோ சொல்லுங்கள். அறிவில்லாமல் தப்பிலித் தனங்களை செய்து பொய் பேசும் மானங்கெட்ட தடியனாக திரியும் மனமே கேள். குரங்கு போல் தாவும் மனதை ஒருமுகப்படுத்தி ஒப்பிலாத ஒருவனாகிய செஞ்சடையனாகும் ஈசன் பாதம் மெய்ப் பொருளாக உண்மையில் உள்ளதை உணர்ந்து அந்த ஒன்றையே மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். அதன் பயனால் உயிரும் போகாது, உடம்பும் நாறாது, மரணமிலாப் பெரு வாழ்வில் வாழலாகும். ஈசன் பாதம் ஒன்றே உண்மை என்பதை உணருங்கள்.          

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 525
பிரப்பதேலாம் இறப்பதுண்டு பேதை மக்கள் தெரிகிலாது
இறப்பதில்லை யென மகிழ்ந்தே எங்கள் உங்கள் சொத்தெனக்
குறிப்புப் பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ
நிரப்பும் பொந்தி அழிந்தபோது நேசமாமோ வீசனே.       
     

இப்பூமியில் பிறப்பவை எல்லாம் ஒருநாள் இறந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளாமல் பேதை மனிதர்கள், நாமும் ஒரு நாள் இறந்து போவோம் என்பதை அறியாமல், இது என் சொத்து, அது உன் சொத்து என மகிழ்ந்து அது குறித்தே பேசிக் கொண்டு திரிவார்கள். அதனால் அவர்களின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியுமா? அவர்கள் இன்றிருக்கும் கோலம் என்றும் நிலைத்திடுமா? வயிறு நிரம்ப தின்று வளர்த்த இந்த உடம்பு அழிந்த போது அவையாவும் உங்களுடன் நேசமாகி கூட வருமா? ஈசன் ஒருவனே என்றும் நித்தியமானவன்.
             

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!
 
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!