Search This Blog

Jan 21, 2012

சிவவாக்கியம் (466-470) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (466-470)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -466

நினைப்ப தொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே
அனைத்துமாய் அகண்டமாய் அனாதி முன் அனாதியாய்
நினைக்குள் நானெனக்குள் நீ நினைக்கு மாறது எங்ஙனே.      
            

உன்னை நினைப்பது ஒன்றில் தான். அந்த ஒன்றைத் தவிர வேறெதிலும் உன்னை நான் காணவில்லை. என்னில் நினைவாகவும், மறதியாகவும் நின்றது மாயையால் வரும் மயக்கமே. அனைத்திலும் நீயாய் அகண்டம் யாவும் நீயாய் அனாதியான மெய்ப் பொருளுக்கு முன்பே உள்ள அனாதியாய் இருப்பவன் நீயே, நினைக்கும் நினக்குள் நானும் எனக்குள் நீயும் இருப்பதையும் என் நினைவே நீயாக ஆனபின் உன்னை நினைப்பதும், மறப்பதும் எவ்வாறு ஐயனே!!!
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -467
கருக்கந்த காலமே கண்டு நின்ற காரணம்
உருக்க
ந்த போதலோ உன்னை நானுணர்ந்தது
விரிக்கி
லென் மறைக்கிலென் வினைக் கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ.

நான் கருவான காலத்திலேயே என்னில் கலந்து நின்றவன் ஈசன். அனைத்திற்கும் காரணமானவன் அவனே. காரண குருவாக அவனை எனக்குள் மெய்ப்பொருளாக கண்டு உருவாக கலந்து நின்ற உன்னை அறிந்து உண்மையான தியானத்தில் இருந்த போதல்லவோ உன்னை நான் உணர்ந்தேன். அது என்பதை விரிவாக சொன்னாலும் மறைவாக சொன்னாலும் அது ஒன்றுதான். இருவினைக்கு உட்பட்டு இன்ப துன்பங்கள் யாவினுக்கும் என்னோடு இசைத்திருந்தது அதுவே. என் அனுபவமாக வந்த மெய்ப் பொருள் உண்மையை உணர்ந்து அவ்வுருவில் கலந்து நின்று தவம் புரிந்தபோது நீயும் நானும் ஒன்றே.   
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -468
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள்
ஞானமான சோதியை நாடியுள் அறிகிலீர்
ஞானமாகி நின்றதோர் நாதனை அறிந்த பின்
ஞானமற்ற தில்லை வேறு நாமுரைத்ததுண்மையே.
                       
ஞான நூல்கள் பலவும் தேடிப்படித்துவிட்டு ஞான போதனை செய்து உபதேசிக்கும் ஞான யோகிகளே!! ஞானப் பொருளானதில் நின்ற சோதியை சுழுமுனை நாடியில் உங்களுக்குள் தேடி நாடியே தியானித்து அதை அறிந்தீர்களா? ஞானமாகி நின்ற ஓரெழுத்தாகிய மெய்ப்பொருளில் குருநாதனாக உள்ள ஈசனை அறிந்து கொண்டபின் ஞானமாகி நின்ற அந்த மெய்ப்பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதே யாம் உரைக்கும் உண்மையாகும்.             
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 469
கருத்தரிப்பதற்கு முன் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிப்பதற்கு முன் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்
விருப்புணர்ந்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.    

நாம் கருவில் தரிப்பதற்கு முன் உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக தரித்து உடம்பு வருவதற்கு முன் உயிர் எங்கு எவ்வாறு நின்றது. மனம் பொருந்தியிருந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடத்தில் எங்கள் ஞான வேட்கையை உணர்ந்த அருளடைந்த ஞானிகளே! இவைகளை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்து உபதேசிக்க வேண்டும்.         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 470
கருவினில் கருவதாய் எடுத்த ஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மறுவினைப் பிறவி மூன்று காலமும் வகுத்த பின்
உறுவினைப் பயனிதென்று உணர்ந்த ஞானி சொல்லுமே.       
     

கருவினில் கருவாகி நின்ற அதுவால் எடுத்த உடலும் உயிரும் ஏழு பிறவிகள் எடுத்து தோன்றுகின்றது.அப்பிறவியில் செய்யும் இரு வினைகள் மட்டுமே உயிரைப் பற்றி இறந்தும் பிறந்தும் இவ்வுலகில் உழன்று கொண்டிருக்கின்றது. வினையால் எடுக்கும் மறு பிறவியில் இரு வினைகளின் நியதிப்படி இறைவனால் முக்காலங்களும் வகுத்து அமைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து இப்பிறப்பிலாவது இறைவனைச் சேர்ந்து உய்வடைய இறவா நிலையடைய உறுவினைப் பயனாக உள்ள மெய்ப்பொருள் இதுதான் என்று அதை உணர்ந்த ஞானிகள் விரிவாக எடுத்துச் சொல்லி உபதேசிக்கவேண்டும்.                

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைத் தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!