Search This Blog

Dec 30, 2011

சிவவாக்கியம் (336-340) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (336-340)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -336
ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே
கான்மையான வாதி ரூபம் கால கால காலமும்
பான்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நான்மையான நரலை வாயில் நங்குமிங்கும் அங்குமே.
 
     
ஆண்மை ஆண்மையென்று ஆண்மை பேசுகின்ற அசடர்களே! பெண்மை இல்லாத ஆண்மை வந்தது கிடையாது. உங்களின் உடலிலே காணும் ஆதியான வாலை ரூபம்தான் காலா காலமும் யாவருக்கும் இருந்து வருகின்றது. அதுவே பாங்கான வண்ணம் மூன்றாகி பசுபதி பாசமாகி நின்றிடும். அந்த வாலை நாறாத யோனியில் நாற்றம் இல்லாத நரலைவெளி வரும் வாசலில் தங்கி இருப்பதை இங்கும் அங்கும் எங்குமே அவளால் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள்.
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -337
மிங்கு என்ற அட்சரத்தின் மீட்டுவாகி கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன் மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியில் ஆகும் ஏகம் ஆகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி.  
 
மிங்கு என்ற அட்சரம் ஒரேழுத்து அதனை வாசியில் ரீங்கார ஓசையுடன் மீட்டி கூ என்ற உகாரத்துடன் கூட்டி ஊதும் போது, வாசியானது துல்லியமாக லயமாகி மேலேற்றும் அது சந்திரகலையில் சந்திரனில் இருக்கும் மனமே அறிவாக மாறி நின்றிடும். அறிவும் மனமும் ஒன்றாகி சூக்கும அங்கத்தின் சுழிமுனையில் புகுந்து செல்வதை உணர்ந்தால் இராப்பகல் இல்லா இடத்தே சேரலாம். அப்போது அறிவு மனம் உணர்வு ஆகிய மூன்றும் ஒன்றிணைத்து தியானம் செய்யுங்கள். பரம்பொருள் சுடரொளியாகி ஜோதி காட்சியைக் காணுங்கள்.       
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -338
சுடரேழும்பும் சூட்சமும் சுழிமுனையின் சூட்சமும்
அடரெழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமும்
திடரதான சூட்சமும் திரியின் வாலை சூட்சமும்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே.

       
தீயான அக்னிகலையில் சோதி எழும்பும் இரகசியத்தையும் சுழிமுனை இருக்கும் இரகசியத்தையும், சூரியனில் உயிர் எழும்பி நானாக ஏகமாக அமர்ந்து நின்ற இரகசியத்தையும், திடப்பொருளான அதுவாக உள்ள ஞானப்பொருளின் இரகசியத்தையும், உடம்பாகிய காயத்தின் உயிர் எனும் திரியாக வாலை இருக்கும் இரகசியத்தையும், ஏழு கடலும் அடங்கி நீராக நின்ற இரகசியத்தையும் தன்னை அறிந்து தனக்குள்ளேயே கண்டு தவம் புரிபவர்களே ஞானிகள். 
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 339
ஞானி ஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழை நாளென்று வாதி கோடி கோடியே
தானிலாத சாகரத்தின் தன்மை கானா மூடர்கள்
முனிலாமல் கோடி கோடி முன்னறிந்த தென்பரே. 
 
  . 
தன்னையே ஞானி ஞானி என்று சொல்லித் திரிந்து நின்ற பேர்கள் கோடி கோடியாக நாயாகி பிறப்பார்கள். வானில் இல்லாத மழை நீரே அமுரி என்று நாள்தோறும் கூறி அதனை தேடித் தேடி அலையும் வாதிகளும் கோடி கோடியாக வருவார்கள். தன்னந்தனியாக தனக்குள் இருக்கும் தங்கத்தின் தன்மையை அறிந்து காணாத மூடர்கள் தங்கள் முன்னேயே உள்ளதை உணராமல் நாங்கள் அனைத்து இரகசியங்களையும் முன்னமே அறிந்தவைகள்தான் என்று பேசியே மாண்டவர்களே கோடி கோடியாவார்கள்.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 340
சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வெயிலே விபுலை தாங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடி இருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே.     
  . 
உடம்பில் சூட்சமான இடத்தில் கொம்பாக உள்ள சுழி முனையில் உள்ள தீயான சுடரிலே வீசிக்கொண்டு ஆடிய உயிரில் வாலை தங்கிப் பத்தாம் வாசலில் கூச்சம் மிகுந்திருக்கும் கொம்பிலே குரு குடியிருந்த கோயிலான கோனாகிய இடத்திலே தொட்டுக் காட்டி தீட்சை வழங்கிய சோதி விளங்கிய இடத்தில் சிறந்து இருந்த அது சிவமே என்பதை அறியுங்கள்.
     

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!