Search This Blog

Oct 30, 2011

தியானமும், யோகமும் - ஸ்ரீ அரவிந்தரின் ஆத்ம சமர்ப்பணம் (இரண்டாம் பகுதி)

அரவிந்தரின் ஆத்மா சமர்ப்பணம் (இரண்டாம் பகுதி)
ஸ்ரீ அரவிந்தரின் ‘ஆத்ம சமர்ப்பணத்திற்குத் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் விளக்கத்தை நடைமுறைப் படுத்தும்பொழுது, நமக்கு அந்தத் தெளிவு சுலபத்தில் கிடைத்துவிடும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஆதியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக அதை நினைவு கூர்ந்து அடி முதல் நுனி வரையிலான எல்லா விவரங்களையும் அன்னையிடம் சொல்வதையே ஆத்ம சமர்ப்பணம் என்கிறோம்’, என்பதை தெளிவு கருதி மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். 

அன்னையிடம் அந்தப் பிரச்சினையைப் பற்றிய வாக்குமூலத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்பொழுதே, ‘நாம் அலட்சியமாக நினைத்தவை எல்லாம் எத்தனை பெரிய இடையூறுகள்?’ என்பது புரியும். அதற்கப்புறமும் கூடச் சிலருக்குப் புரியாமல் இருக்கவும் கூடும். என்றாலும் அன்னையிடம் அவர்கள் தம் பிரச்சினையின் தோற்றத்தை ஓரளவு சொன்ன காரணத்தால், பின்னர் பிரச்சினையின் மொத்தப் பரிமாணத்தையும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைப் பெற்றுவிடுவார்கள். நாள் தோறும் மீண்டும் மீண்டும் பிரச்சினையின் வரலாற்றை அன்னையிடம் சமர்ப்பித்துக் கொண்டு வந்தால் நம்முடைய பிரச்சினையும், அன்னையின் ஒளியும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து ஒரு நாள் சந்திக்கும். அந்தச் சந்திப்பு நிகழும் நேரத்தில் பிரச்சினை பளிச்சென்று தீரும்.

பிரார்த்தனை பலிக்கவில்லைஎன்றுகூடச் சிலர் நினைக்கின்றார்கள். அது உண்மையே. அப்படி நினைக்கின்றவர்களுடைய குறைபாடு வெளிப்படையாக எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவர்களுக்குத் தெரிவது இல்லை. நோய் தெரியாமல் மருந்துண்ணுவது எப்படி? அவர்கள் முதலில் தங்களின் நோய் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தங்களுடைய குறைபாடு என்னவென்பதை நுணுகிச் சலித்து அறிய வேண்டும். அது முடியாத பட்சத்தில், நெருங்கிப் பழகுபவர்களிடம் பிரச்சினைக்குக் காரணமான நம் குறைபாடு என்ன என்பதைக் கேட்டறிந்து அந்தக் குறைபாட்டை விலக்கியபின், பிரார்த்தனை செய்வது முதல் வழி. 

இந்த முதல் வழியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தபிறகு, பிரச்சினையின் முழு விவரத்தையும் தினந்தோறும் ஒரு முறை அன்னையிடம் சொல்ல வேண்டும். இது இரண்டாவது வழி. முதல் வழியைப் பின்பற்றுவதன் மூலம் பிரச்சினை நாள் கடந்து தீரும். இரண்டாவது வழியின் மூலம் பிரச்சினை நிச்சயமாகத் தீரும்.

ஆனால், விரைவில் தீராது. ஏனென்றால் பிரார்த்தனைக்கு இரு கடமைகள் உண்டு. முதலில் பிரார்த்தனை, பிரச்சினைக்கு உரிய குறையை அகற்ற வேண்டும். பின்னர் பிரச்சினையைக் கரைக்க வேண்டும்.

ஒருவர் ஆலை முதலாளி. 10 கோடி மூலதனத்துடன் 500 தொழிலாளர்கள் வேலை பார்க்கும் ஆலை அவருடையது. வேலை பார்க்கும் ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு பிரச்சினையுடன் வந்து சந்தித்தபோது அவர் எரிச்சலுடன், “இப்படி ஒவ்வொருவராக வந்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். எல்லாத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து சங்கம் அமையுங்கள். தலைவரை நியமியுங்கள். உங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து அவரை என்னிடம் அனுப்புங்கள்என்று சொல்லிவிட்டார். பிறகு என்ன? ஆலைக்குள் சங்கம் வந்தது; தலைவர் வந்தார். கூடவே தாங்க முடியாத அளவுக்குப் பிரச்சினைகளும் வந்தன. இத்தனையும் வந்தபிறகு வழக்கமாக வரும் கோஷம், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் போன்றவையும் வந்து ஒரு போராட்டத்தைத் தூண்டிவிட்டன.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தவர் அந்த ஆலை முதலாளிதான். சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் அவர்தாமே! வம்பை விலை கொடுத்து வாங்கிச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிய நிலையில் அவர் என்னைச் சந்தித்து, “சிக்கல் தீர வழி கூறுங்கள்என்று வேண்டினார்.
சொல்லப்போனால் வேலை நிறுத்தத் தலைவர் நீங்கள் தான். அதாவது சிக்கலுக்குக் காரணமான சங்கத்தை ஆரம்பிக்கச் சொன்னவர் நீங்கள் தானே? அன்னையிடம் இந்தப் பிரச்சினைக்குத் தோற்றுவாயாக அமைந்த உங்கள் குறைபாட்டைக் கூறிப் பிரார்த்தனை செய்யுங்கள்என்றேன் நான். அவர் தம் தவற்றை உணர்ந்து, தம் குறையை அன்னையிடம் சமர்ப்பித்து, நிவாரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்தார். சில நாட்களில் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. கடைசியில் யூனியனே காணாமல் போய்விட்டது! 


ஆத்ம சமர்ப்பணம் என்பது, ஆன்மா விடுதலை அடைய வழி செய்யும் ஒரு யோக நெறியாகும். யோகம் சித்தி பெற உதவும் உயர்ந்த சில முறைகளுள் இதுவும் ஒன்று.  மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! ஸ்ரீ அரவிந்த சுவாமிகளின் ஆத்ம சமர்ப்பனத்தைத் தொடர்ந்து...




No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!