இதுவரை சிந்து சமவெளி நாகரீகத்தில் இந்து மதத்தின் மூலக் கூறுகள் பதிந்திருப்பதை விரிவாக சொல்லியதற்கு மிக முக்கியமான காரணங்கள் உண்டு. அதாவது சிந்துவெளி நாகரீகமும் வேதகால நாகரீகமும் வேறு வேறானது இரண்டுக்கும் சம்பந்தம் இல்லாதது என்பதை தெளிவுபடுத்துவதே முக்கிய நோக்கமாகும். இதில் சிந்து வெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தியதா பிந்தியதா என்ற முடிவை இதுவரை எந்த ஆராய்ச்சியாளனும் எட்டவில்லை என்றாலும் சிந்து மக்கள் பயன்படுத்திய சமய சின்னங்கள் வேதங்களுக்கு முற்பட்டவை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு வேதங்களிலேயே பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. நான்கு வேதங்களை மிக நுணுக்கமாக ஆராயும்பொழுது இந்த உண்மை நமக்கு தெரியவருகிறது.
இந்தியாவின் பூர்வகுடிகள் ஆரியர்களா, திராவிடர்களா என்பதை இதுவரை யாரும் அறுதியிட்டு கூற முடியவில்லை என்றாலும் இந்த இரு இனங்களுக்கு முன்பே மனித சமூகம் இந்தியாவில் நல்ல முறையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அந்த மனித சமூகத்திடமிருந்து திராடவிடர்களோ ஆரியர்களோ நாகரீகத்தை பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் உறுதியாகும். அதாவது நாகரீகத்தை பெயர் தெரியாத இந்திய பூர்வ குடிகள் இவ்விரு இனத்தாருக்கு வழுங்கியிருக்கிறார்கள். அத்தகைய நாகரீக தானத்தை முதன் முதலில் பெற்றவர்கள் திராவிடர்களாகவே இருக்க வேண்டுமென்று பரவலான கருத்து உள்ளது. அதை மறுப்பதற்கு

வேதங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் திராவிட நாகரீகத்தில் வேதக் கருத்தக்களின் சேர்க்கையால் இந்து மதக் கருத்துக்கள் உருவானதா அல்லது வேத நாகரீகத்தில் திராவிடக் கருத்துகளின் சேர்க்கையால் அவை உண்டானவைகளா என்ற குழப்பங்கள் வலுவாக இருந்தாலும் இந்து மதக் கருத்துக்கள் என்பது வேத நாகரீகத்திலிருந்து வளர்ந்த எளிய வளர்ச்சி அல்ல என்பதை உறுதியாக நம்ப முடிகிறது. வேத சார்பில்லாத மூலக் கருத்துக்கள் இந்து மதத்தில் பரவி கிடப்பதனால் இந்த நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது. திராவிடன் என்ற சொல் குறிப்பாக எந்த பொருளை சுட்டிக் காட்டுகிறது என்று தெளிவாக கூறமுடியாது. இச்சொல் மொழிவாரியான இனத்தை குறிக்க ஒரு மக்கள் குழுவை குறிக்க அல்லது ஒரு நாகரீக தொகுதியை குறிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

வட மொழியின் தாக்கம் திராவிட மொழிகளில் வலுவாக இருந்தாலும் கூட அவைகள் தனது தனிதன்மையை முற்றிலுமாக இழந்துவிடவில்லை. நமது நாட்டில் ஏற்பட்ட இனக்கலப்புகள் இன்று எவரையும் ஆரியன் என்றோ திராவிடன் என்றோ பிரித்து கூற இயலாவிட்டாலும் வடமொழியில் கலந்துள்ள திராவிடச் சொற்களை இன்று கூட மிக எளிதாக பிரித்துக் காட்டி விடலாம். அதாவது மனித இனங்கள் கலப்பினால் தனது சுயத் தன்மையை இழந்து விட்டாலும் மொழிகள் தனது தற்சார்பை இழக்கவில்லை இதனால் வேத இலக்கியங்களில் கலந்துள்ள மாறுபட்ட தன்மைகளை நம்மால் சுலபமாக பிரித்தறிய முடிகிறது. இதனால் வேதத்தில் மூலப்பாடத்தில் உள்ளவைகளோடு சம்பந்தப்படாத கருத்துகளை வேதத்திற்கு முற்பட்டக் கருத்துகள் அதில் காலம் தாழ்ந்து இணைந்த கருத்துகள் என்று கருதமுடிகிறது.
நமது நாட்டு கருத்துகளின் வளர்ச்சியில் காடுகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. முனிவர்களின் தவச் சாலைகளே அக்காலத்திய கருத்து கருவூலங்களாக இருந்திருக்கின்றன. அத்தகைய தவச்சாலைகள் காடுகளிலேயே பெருவாயாக இருந்திருப்பதினால் இந்திய கருத்துக்கும் காட்டிற்கும் உள்ள தொடர்பை தாய், மகன் தொடர்போடு ஒப்பிட்டு சொல்லலாம். ஆனால் இத்தகைய காடுகளின் சமூக பங்கு உபநிஷத காலத்திலிருந்தே தொடங்குவதாக பலர் சொல்லுகிறார்கள். அதாவது வேதகால நாகரீக சிந்தனைகளுக்கும் காடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கருதப்படுகிறது.

வேத வர்ணனைகளில் படம்பிடித்து காட்டப்படும் தெய்வங்கள் அக்கால நாகரீக சின்னங்களாக கருதப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர்களிலேயே பவனி வருவதை காணமுடிகிறது. காடு சார்ந்த வாழ்க்கையில் மிக முக்கிய தொழிலாக கருதப்படும் வேட்டையாடுதலை இந்த வேத தெய்வங்கள் மேற்கொண்டதாக தெரியவில்லை. மாறாக வேதங்களில் அதி தேவதைகளாக கருதப்படாத மற்ற தெய்வங்களை குறிப்பிடும் பொழுது வேட்டையாடுதல் என்பது இணைத்து பேசப்படுகிறது. ஏறக்குறைய இந்து மதத்தின் மிக முக்கிய பிரிவுகளில் ஒன்றான சைவ சமய தெய்வங்களை பற்றி பேசப்படும் பொழுது அவைகளோடு வேட்டை ஆடுதலும் பேசப்படுகிறது. இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும். மனித சமூகம் தான் தோன்றிய காலத்திலேயே விலங்குகளை பழக்கப்படுத்தி தங்களது தேவைகளுக்கு துணை புரிவதாக ஆக்கி கொள்ளவில்லை ஆரம்ப கால மனிதன் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசங்களை உண்பதற்கு தெரிந்து வைத்திருந்தானே தவிர அவைகளை வேளாண்மைக்கும் பயணத்திற்கும் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கவில்லை. எனவே ஆதிகால மனிதன் தனது சிந்தனையில் தன்னை போலவே கடவுள்களும் வேட்டையாடுதலை தொழிலாக
கொண்டிருக்கும் என்று கருதுவானே தவிர தேர்களை ஓட்டுவது பற்றி சிந்தித்திருக்க மாட்டான். எனவே வேட்டையாடும் தொழிலை மேற்கொள்ளும் தெய்வங்கள் சைவ சமய சார்பில் வேதங்கள் காட்டுவதால் வேதகாலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்த சமயம் சைவ சமயம் என்றும் அது பிற்காலத்தில் வேதங்களோடு இணைக்கப் பெற்று செழுமை பெற்றிருக்க வேண்டும் என்றும் சிந்திக்க முடிகிறது.


சாஸ்தா எனும் ஐயப்பன் சிவனுக்கும் திருபாற்கடலை கடைந்த போது உருவான அமிர்தத்தை பகிர்ந்த போது உருவான மாயை என்ற விஷ்ணுவுக்கும் பிறந்ததாக கருதப்படுகிறது. தென்னிந்தியாவில் சாஸ்தா தெய்வங்கள் இருக்கும் பகுதிகளை காவு என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுவதை காணலாம். காவு என்ற வார்த்தைக்கு காடுகள் அல்லது சோலைகள் என்ற பொருளை சொல்லலாம். அதாவது காட்டுப் புறத்திலும் சோலை வனங்களிலும் சாஸ்தா வணங்கப்பட்டதாக சொல்லலாம். இன்று கூட திருநெல்வேலியின் எல்லை கிரமமாக இருக்கும் காரிக்கோயில் என்ற ஊரில் பூமிக்கு அடியில் கடலோரத்தில் உள்ள சாஸ்தா கோயில் காரி சாஸ்தா அல்லது காவு சாஸ்தா என்று அழைக்கப்படுவதை காணலாம். புலிப்பால் கொண்டு வர சாஸ்தா அனுப்பப்பட்டதும் எருது முக அரக்கனோடு காளி தேவி சண்டையிட்டதும் சாஸ்தா, காளி ஆகிய இரு தெய்வங்கள் காடுசார்ந்த சமய வளர்ச்சியால் உருவானவைகள் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும். இந்த இரு தெய்வங்களும் வேதங்களால் ஆரம்பத்தில் சிறப்பித்து கூறப்படவில்லை என்பதிலிருந்தும் இவைகள் தென்னிந்திய சாயலில் வர்ணிக்கபடுவதிலிருந்தும் வேதங்களுக்கு முற்பட்டே இத்தெய்வ வழிபாடுகள் நமது நாட்டில் இருந்திருப்பது நன்கு புலனாகும்.


No comments:
Post a Comment
பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!