Search This Blog

Mar 9, 2012

குருவின் அவசியமும் அநாவசியமும் !! படித்ததில் பிடித்தது:

உண்மையான குரு அகத்திலுள்ள நான் எனும் ஆன்மாவே, மனிதன் தனது உடலினை பார்த்தறிவதற்கு கண்ணாடி எப்படி உபயோகமாகிறதோ அது போல் எமது உண்மையான சொருபத்தினை அறிவதற்கு தன்னை அறிந்த ஒரு புறக்குரு தேவைப்படுகிறார், அவர் ஒரு கருவி மட்டுமே! இதுதான் உனது உண்மையான சொரூபம் என காட்டிவிட்டபின் அந்த அனுபவத்திலிருந்து எமது உண்மையான ஆன்ம சொருபத்தினை அறிவது நான் ஆகிய எமது அகக்குருவின் வேலை, இந்த படிமுறையில் (குருவை மையமாக கொண்ட எந்த ஆன்மவித்தையிலும் தாந்திரீகத்தில்) தன்னை உணர வைக்கும் செயல் முறையான தீட்சை மட்டுமே குருவால் கொடுக்கப்படுகிறது, அதன் பின் மாணவன் தனது சுய முயற்சியாலும், தேவைப்படி ஆன்மாவினை அறியும் நோக்கத்தில் சலனமுறும் போதும் அவரவர் பக்குவத்திற்கமைய அகக்குருவும், புறக்குருவும் வழிகாட்டுகின்றனர்.

இந்திய ஆன்ம மரபில் பொதுவாக சித்த குருக்களும், தாந்திரீக குருக்களும் மாணவன் பக்குவமடைந்த பின் தம்முடைய பாதையினை சுயமாக தேர்ந்தெடுத்து தமது சாதனையினை தொடர்வதற்கு அனுமதிக்கின்றனர். சமூக அலகில் அது நிறுவனமயப்படுத்தப்படும் போதும், ஞானத்தால், சாதனையால் பெறும் சக்திகளை, சித்திகளை தமது அகங்காரத்தினால் துஷ்பிரயோகம் செய்ததாலும், அவற்றை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனங்களாக மடங்களும், பீடங்களும் உருவாகும் போதுதான் நாம் விவாதிக்கும் குரு சிஷ்ய சேவை, பணம், என ஆன்ம ஞானத்திற்கு உபரியான மற்றைய விடயங்கள் வருகின்றன.

இன்னொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது உலகில் பலவிதமக்கள் தமது மன உருவகங்களுக்கு ஒவ்வொரு விடயங்களிலும் திருப்தி உறுகின்றனர். உணவைப் போல், சினிமாவைப்போல், பொழுதுபோக்கு போல் மனதின் அடிமையான மனிதனிற்கும் ஆன்மீகமும் பலவித சுவைகளில் தேவைப்படுகிறது. இவற்றை திருப்திப்படுத்த முனையும் குரு உண்மையான ஞானத்தினை கொடுப்பதில்லை. அல்லது நோக்கம் வழி மாறுகிறது, இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் சிக்கி தமது மனநிம்மதி யினையும் பணத்தினையும் இழந்து பின்பும் மனப் போராட்டத்தில் சிக்கி இந்த மார்க்கமே பொய் என்ற மனவிரக்தியில் பலர் புலம்புவதை நாம் காண்கிறோம்.

ஆகவே ஆன்மீக  பாதையில் செல்ல விரும்புபவர்கள் குருவின் அவசியத்தினையும் அநாவசியத்தினையும் புரிந்திருப்பது அவசியம்! இல்லாவிடில் வீண் மனக்குழப்பம்தான் எஞ்சும்! 
==============================================









Posted by சுமனன்: மிக்க வந்தனங்களுடன் மீள்பதிவு: 
மேலும் பயணிப்போம் இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா..

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!