Search This Blog

Dec 28, 2011

சிவவாக்கியம் (331-335) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (331-335)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -331
வழுத்திடான் அழித்திடான் மாயரூபம் ஆகிடான்
கழின்றிடான் வெகுண்டிடான் கால கால காலமும்
துவண்டிடான் அசைந்திடான் தூயதுபம் ஆகிடான்
சுவன்றிடான் உரைத்திடான் சூட்ச சூட்ச சூட்சமே.

     
ஈசனை வழுத்தி நின்றே ஆன்மா உடலுக்குள் உறைகின்றது. ஆதலால் அது அழியாதது. மாய ரூபம் ஆகி நமக்குள் அது நின்றது. உடலை விட்டு கழன்றிடாது இருப்பது. பொறாமை கொள்ளாது வெகுளியாய் இருப்பது. காலா காலமும் சாகாக்காலாகவும் போகாப்புனலாகவும் வேகாத்தலை யாகவும் நித்தியமாக உள்ளது. எந்நிலையிலும் துவண்டிடாது ஒரே நிலையில் இருப்பது. அசையாத தூய தீபமாக நின்றது. ஒரே அளவில் அனைத்திலும் சுவன்றிடாது இருப்பது. அது வெளியாக உரைக்கப்படாதது. அது இரகசியமாக மிகவும் சூட்சுமமாக உள்ள சூட்சம் ஆன்மா.


***************************************************
சித்தர் சிவவாக்கியம் -332
ஆகி கூ வென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகி யோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்
போகமாய் மனக்குரங்கு பொங்கு மங்கும் இங்குமாய்
ஏகம் ஏகமாய் இருப்பார் கோடி கோடியே.
 
வாலையின் அட்சரமான அ, இ, உ என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்கும் முறையை அறிந்து கொண்டு இறை ஆனந்தம் அடையும் வழியை யோகி யோகி என்று சொல்லித் திரியும் பலர் அதையே உற்று பயிற்சி செய்து கண்டறிந்தார்களா? அந்த மூன்று அட்சரங்களையும் முற்றும் அறிந்து அதனை உங்களுக்குள் வாசியினால் ஆகி கூ என்று ஓதி போகமாய் ஊதி வாசியோகம் செய்யும் யோகிகள் இங்கும் அங்கும் குரங்கைப் போல் தாவும் மனதை அடக்கி ஏகமாகிய பரம்பொருளை அறிந்து ஏகமனதோடு தியான தவத்தில் இருப்பார்கள்.      
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -333
கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர் ஆதியை
நாடி நாடி நாடி நாடி நாலகன்று வீணதாய்
தேடி தேடி தேடி தேடி தகமும் கசங்கியே
கூடி கூடி கூடி கூடி நிற்பார் கோடி கோடியே.

     
உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆதி என்றால் என்ன? அதனை அடைந்தால் இறவா வரம் பெறலாம் என்பதை உணர்ந்து அதனை நாடி பூஜைகள் செய்து நாட்கள் கழிந்து வீனாகியதேயன்றி, ஆதியை அறியாமலேயே உள்ளார்கள். பலர் பல வழிகளிலும் பற்பல காடு மலை கோயில் என்று தேடி அலைந்தும் அவர்கள் தேகம் மெலிந்து வாடியதே யன்றி ஆதியை அறிந்தாரில்லை. அந்த ஆதியான மெய்ப்பொருள் தன்னிடம் உள்ளதை உணராமல் தனக்குள்ளேயே நாடி தேடாமல் கூடிக் கூடி ஏங்கி நிற்பவர்கள் எண்ணற்ற கோடியே.
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 334
கருத்திலான் வெளுத்திலான் பரண் இருந்த காரணம்
இருத்திலான் ஒலித்திலான் ஒன்றும் இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில் கீயும் கூவும் உற்றான் கண்டறிந்த ஆதியை.
 
  . 
ஆதியாக பரண் இருந்த மைப்பொருள் காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். அது கருப்பு இல்லை. வெளுப்பும் இல்லை. இருப்பதும் இல்லை, ஒளிவதும் இல்லை. ஒன்றும் இல்லை, இரண்டும் இல்லை. அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அது ஒழிந்து போவதோ அழிந்து போவதோ இல்லை. அது எந்த விதமான வடிவமோ குணமோ நிறமோ இல்லாத தன்னந் தனியாக நின்ற பொருள் என்பதை கருத்தில் வைத்து தியானத்திலிருந்து வாசியினால் கீயும் கூவும் கொண்டு ஓதி ஊதி அறிவு, உணர்வு, நினைவு ஆகிய மூன்றையும் ஒன்றாக்கி யோகம் புரியும் சாதகர்கள் தங்களுக்குள் ஆதியாய் அமர்ந்த மெய்ப்பொருளை கண்டு அறிந்து கொள்வார்கள்.  

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 335
வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான்
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மழுங்கி உளறுவான்
வீதி வீதி வீதி வீதி விடை ஏறுப் பொறுக்குவோன்
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான்.     
  . 
வாத வித்தை செய்யும் வாதிகள் அமுரியான வழலையிலிருந்து காய்ச்சி எடுக்கும் வண்டலாகிய உப்பையும் அதை முப்பு ஆக்குவதையும் முறையாக அறியமாட்டார்கள். வாதம் செய்கின்றேன் என்று செம்பை பொன்னாக்க முயற்சித்து உலையில் வைத்து ஊதி ஊதி தனக்குள் உள்ள ஒளி மழுங்கி ஏதேதோ உளறுவார்கள். வீதி வீதியாக சென்று புடம் போடுவார்கள். இப்படி பல வகைகளிலும் முயற்சித்து பத்து மாற்று தங்கம் செய்ய ஆசைப்பட்டு உழன்றும் அதனை காண முடியாது நெஞ்சம் புண்ணாகி மாள்வார்கள். சொக்கத் தங்கமாக தனக்குள் விளங்கும் சோதியை உணர்ந்து வாசியோகம் செய்து கற்பம் உண்டு முப்பு முடித்த ஞானிகளே இந்த வாத வித்தையை செய்ய வல்லவர்கள்.
     

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!


No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!