Search This Blog

Jul 2, 2011

இந்து மத வரலாற்று தொடர் அதர்வணவேதம்..பகுதி (பாகம் 15)


இந்து மத வரலாற்று தொடர்(பாகம் 15)
அதர்வணவேதம் பகுதி.
குருஜியின் அருளாசியுடன்....
   

அதர்வண வேதம் கடைசி வேதமாக கருதப் படுகிறது. ஏறக்குறைய யஜூர், சாம வேதங்கள் உருவான காலத்திலேயே அதர்வணம் உருவாகி விட்டது என்றாலும், அது அப்போது வேதமாக ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. பகவத் கீதையில் கூட முதல் மூன்று வேதங்களை பற்றி விபரங்கள் தெரிவிக்கப் படுகிறது, தவிர அதர்வணத்தை பற்றி  பெரியதாக எதுவும் கூறப்படவில்லை. இதனால் மகாபாரத காலத்திற்கு பின்னரே அதர்வணம் வேதம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருத முடிகிறது.

ரிக்
வேதம் தெய்வங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை எப்படி பெறலாம் என்று கூறுகிறது.  யஜூர் வேதம் தெய்வங்களுக்கான சடங்கு முறைகளை விரிவாகக் கூறுகிறது.  சாம வேதம் சோமபானம் முதலிய பொருட்களை உருவாக்குதலை பற்றி கூறுகிறது தெய்வத்தால் மட்டுமே மனிதர்கள் கலப்பில்லாத நன்மைகளை பெறலாம் என்பது இந்த வேதங்களின் பொதுவான கொள்கை ஆகும்.  தெய்வங்களை அடைவதற்கு மனிதர்கள் மனம் என்னும் படகை கொண்டுதான் பயனிக்க வேண்டுமென்று  இந்த வேதங்களின் கருத்துகளை ஒட்டி உபநிஷதங்களும் பறைசாற்றுகின்றன.

அதர்வண வேத பாடல்களும் யாக தேவதைகளை போற்றுகின்றன.  உதவிகளை கேட்கின்றன அதே நேரம் தெய்வங்கள் தரும் உதவி என்பது மனித உடல்களின் அவஸ்தைகளை  தவிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டங்களை ஏற்படுத்து வதாக இருக்க கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது.  ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லா விட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர்.  எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களி லிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை  இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்பு தான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன.  இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது.

ஆரோக்கியத்தை விரும்பும் கோரிக்கைகள் அதிகமாக பல பாடல்களில் வெளிப்பட்டாலும் கூட வேறு சில பாடல்கள்  பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கிறது.  திருமணம் ஆகாத குமரி பெண்களுக்கு  திருமணம் வேண்டியும் வயதான பிறகு கூட  திருமணம் முடியாமல் தனிமையில்  தள்ளாடும் ஆண்களுக்கு தக்க துணை வேண்டியும்  குழந்தைகள் இல்லாதவர்கள்  மழலைச்  செல்வங்களை பெற்று மகிழ்வுற வேண்டியும் கடவுளிடம் முறையிடும் பாடல்கள் இருக்கின்றன. 

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் மலட்டுத் தன்மையை போக்கவும் கருச்சிதைவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைக்கும் பாடல்களும் உள்ளன.  இது மட்டுமல்ல பொறாமைகளை  பொசுக்கும் படி சச்சரவுகளை நீக்கும்படி பேதங்களை  மேலெழும்பாமல் அமுக்கும்  படியும் கோபத்தை குறைக்கும் படியும் வீடுகட்டிக்  கொள்ள உதவி செய்யும் படியும் விதை விதைக்கும் போதும் பயிர்களில் பூச்சிக்கள் பரவும் போதும் விளைச்சல் வீட்டுக்கு வந்து சேரும்போதும் கடவுளை பக்கத் துணையாக இருந்து பாதுகாத்து தரும்படி கேட்கின்ற பாடல்களும் அதர்வண வேதத்தில் உள்ளன.

ஆயுதங்களைக் கொண்டும் ஆள் பலத்தைக் கொண்டும் வெற்றி பெற முடியாத எதிரிகளை மந்திரங்கள் கொண்டு செயலிழக்கம் செய்ய வைக்கும் வகைகளும் மேலும் பல மாந்திரீக ரகசிய வித்தைகளும் அதர்வண வேதத்தில் ஆழமாக விளக்கப்பட்டுள்ளது.  அதனால் இந்த வேதத்தை மக்களின் வேதம் என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  காரணம் மக்களுக்கு ஏற்படும் நோய் நொடியிலிருந்தும் அரசுகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களிடமிருந்தும் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த பிரச்சனைகளிலிருந்தும் வெளி வருவதற்கான அனைத்து விதமான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் அதர்வண வேதம் காட்டுவதனால் அப்படி அழைக்கப்படுகிறது.

உதாரணமாக ஜூரத்தினால் துன்பப்படும் மனிதனை காப்பாற்றும் படி அக்னி தேவனை துதிக்கும் ஒரு பாடல் அதர்வண வேதத்தில் இருக்கிறது.  இந்த பாடலை முறையான சந்த லயத்துடன் நோயாளியின் முன்பு  பாடினால் எத்தகைய ஜூரமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் குறைந்து விடுகிறது மேலும் குழந்தை பேரு  தருகின்ற மந்திரத்தால் புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு மட்டுமல்ல சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும் கூட குழந்தை பிறக்கிறது.  இதை நாம் வேதங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக  கூறவில்லை.  எனது சொந்த அனுபவத்தாலும் என் கண்முன்னே மற்றவர்கள் பெற்ற அனுபவத்தாலும் கூறுகிறேன். காய்ச்சலை விரட்டும் அதர்வண வேத பாடலை தமிழ் வடிவில் பார்ப்போம்.

அக்னி பகவானே ஜூரம் என்ற துர்தேவதையை இங்கே இருந்து விரட்டி அடி.  சோமனையும் வருணனையும் உன்னுடன்  சேர்த்துக் கொள்.  அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்கள் சக்தி தரும் சோமனும் குளிர்ச்சித் தரும் வருணனும் அக்னியாகிய நீயும் திரி சூலம் போல் இணைந்தால் இந்த நோய் தங்கி கொடுமைபடுத்தும் தேவதை  புற்களின் மீதும் நெருப்பு  குண்டங்கள் மீதும் அமர்ந்திருக்கும் தெய்வங்களே இந்த ஜூரம் என்ற  தீய சக்தியை வெகு தூரம் துரத்துங்கள். இந்த தீய சக்தி மனிதனை பிடித்து விட்டால் அவனை அது எப்படி யெல்லாம் ஆட்டிவைக்கிறது.  நெருப்பு குண்டமாக அவனது உடலை மாற்றி சக்திகள் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது.  பழங்களின் சாரை உறிஞ்சி விட்டு சக்கைகளை தூர எறிவது போல் மனித உடல்களையும் ஜூரம் செயல்பட முடியாதவனாக மனிதன் மாறி விடுகிறான்.   முப்பெரும் தெய்வங்களே இந்த தீயவனின் கொட்டத்தை ஒடுக்குங்கள். அவனை கீழே  விழ்த்துங்கள்.  மீண்டும் அவன் எழுந்து வராத வண்ணம் குழி தோன்டி புதைத்து விடுங்கள்.   

இதோ அந்த தீயவன் வந்துவிட்டான்.  உடம்பில் குடியேறி விட்டான். அதற்கான அடையாளங்கள் உடல் முழுவதும் பூரான்கள் போல் நெளிகிறது.   மண்ணில் புதைக்கப்பட்ட  விதைகளிலிருந்து சிவப்பு நிற முளைகள் வெளி வருவது போல் உடல் முழுவதும் செம்புள்ளிகள் வரிசையாக பரவி மனிதனை வாட்டுகிறது.  உடல்களை வாட்ட அந்த  தீயவன் பிரயோகம் செய்யும் ஆயுதங்கள் தான் இந்த சிவப்பு புள்ளிகளோ?  தெய்வங்களே விரைந்து வாருங்கள்!! அவன் ஆயுதத்தின் முனைகளை ஒடித்து போடுங்கள். ஆயுதம் வலுவிழந்து விட்டால் ஒடி விடுவான் அல்லவா.  அவனை தப்பி  செல்ல  விடாதீர்கள். மறைந்திருந்து மறுபடியும் தாக்குவான் எனவே அவனை  புதைத்து விடுங்கள்

இவன் எப்போதும் தனி ஆளாக வருவது இல்லை.  இருமல் என்ற சகோதரனையும், எரிச்சல் என்ற தங்கையையும், நடுக்கம் என்ற மாமனையும் இன்னும் வித விதமான உறவு முறைகளையும் அழைத்து வந்து கும்பலாக  தாக்குவான் அவர்கள் ஒவ்வொருவன் உருவங்களும் கண்டுபிடிக்க முடியாதவாறு மாயங்கள் நிரம்பியதாகவும்  மர்மங்களின் வடிவங்களாகவும் இருக்கும் மரண தேவனே வந்து வைத்தியம் செய்தால் இவர்களின் கொட்டம் அடங்குமோ என்னவோ தெரியவில்லை.  சக்தி மிகுந்த அக்னி தேவதையே கரம் கூப்பி மண்டியிட்டு வேண்டுகிறோம்.  இந்த தீயவர்களை விரட்டு இனிமேலும் தலைகாட்டாதவாறு அடக்கு.    

மேலே சொன்ன பாடலை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் ஜூரத்தை பற்றி மட்டுமல்ல அம்மை நோயின் அறிகுறியை பற்றியும் விளக்கப் பட்டிருப்பதை காண்பீர்கள். மேலும் அந்த தீயவனை புதைத்து விடுங்கள் என்று தேவதைகளை வேண்டுவதை வைத்து பார்க்கும் பொழுது நோயை புதைக்க தெய்வங்களை வேண்டிவிட்டு நோய் பாதித்து இறந்தவர்களை  தகனம் செய்யாமல் புதைத்து விடும் பழக்கமும் அக் காலத்தில் இருந்திருப்பதை உணரலாம்.  நோயை விரட்ட பிரார்த்தனை செய்வது மட்டுமல்ல சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு இருப்பதற்கான ஆதாரங்கள் தெரிகிறது.

பொதுவாக அதிகரித்துவிட்ட உடல்  சூட்டை வெளியேற்றுவதற்கு ஜூரமும்  வெளியேற்ற கால தாமதமாகியே அல்லது கிருமிகளின்  தாக்குதலில் முடியாமல் போனதாலும் அம்மை நோய் வருவது உண்டு.  இந்த நோய்களுக்கு இன்றைய நவீன உலகில் பல மருந்துகள் இருப்பது போலவே வேதகாலத்திலும் குஷ்த்தா என்ற மூலிகைமருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்திருக்கிறது மலை பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் அந்த மூலிகையை தெய்வமாகவும் அம்மக்கள்  கருதி இருக்கிறார்கள்.  அதை விளக்கும் ஒரு பாடலில் சில பகுதிகளை  பார்ப்போம்.

குஷ்த்தாவே நீ ஜீரத்தை அழிக்கும் தெய்வம் என்னிடமிருந்து அந்த தீயவனை விரட்டி அடித்தது நீ தான்.  உன்னை நான் வணங்குகிறேன்.  உலக  தாவரவர்க்கங்களில் தலைவனான உன்னை  மலைகளிள் மீதும் நான் கண்டேன்.  கழுகுகள்  கூடு கட்டும் எட்டாத உயரத்தில் நீ இருக்கிறாய்.  நீ எங்களை தாக்கும் ஜூரம் என்ற துர்தேவதையின் வருகையை அறிந்தாலே எந்த உயரத்தில் இருந்தாலும் எங்களுக்காக இறங்கி வருகிறாள்.  இமவானின் மகளான கங்கையை விடவும் வேகமாக நீ  எங்களை நோக்கி வருகிறாய்.  நீயே எங்களின் கருவூலம் உனது பெருமையை ஊரெல்லாம் எடுத்துறைப்போம்.

அரசமரம் என்பது தேவதைகள் குடியிருக்கும் புனிதபீடம் அதன் நிழலில் தான் தெய்வங்கள் வாழ் கிறார்கள். அந்த மரம்  சொற்கத்திலிருந்து பூமிக்கு வந்ததாகும்.  தேவர்கள் அதன் நிழலிலிருந்தான் அமிர்தத்தை தயாரிக்கின்றார்கள். இந்த மரத்திற்கு குஷ்தா தனது சக்தியை வழங்கி இருக்கிறது. இதன் பட்டைகளும் வேர்களும் அமிர்தத்திற்கு ஒப்பானது சோமபானம்  தயாரிப்பதை போல் இதை தயாரித்து குடித்து ஜூரம் என்னும் விரோதியை ஓடஓட விரட்டுங்கள்.    

குஷ்தா என்ற அமிர்தத்தை மலைகளின் மீதும் தேவர்கள் எப்படி அனுப்பு கிறார்கள். தலை நகரத்திலிருந்து அரசனானவன் எத்தகைய ராஜ மரியாதை யுடன்  எல்லை புறத்திற்கு செல்வானோ அதே போலவே குஷ்தாவும் சொர்கத்திலிருந்து மலை முகடுகளுக்கு வருகிறாள்.  அமிர்தமான அவள் வரும் பாதை தங்கத்தால் ஆனது. அது எப்போதும் ஒளிமயமாகவே இருக்கும்  தங்கரதத்தில் அவள் வருவாள். அவள் தேரை  இழுக்கும் குதிரைகள் தங்க நிறமானது.  அவைகளும் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் உயர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டு உயர்ந்த வாகனத்தால்  குஷ்தா என்ற அமிர்த  தேவதை நம்மையும் உயர்த்துவாள் இவள் நமது அருகாமையில் வந்துவிட்டாலே போதும் நம்மை படுக்க வைக்கும் புரள வைக்கும் இம்சை செய்யும்  ஜூர அசுரன் பயந்தே  ஒடி விடுவான்.  எனவே குஷ்கா தேவதையை துதிப்போம்.

ஜூரம் அம்மை நோய் போலவே தலைவலி இருமல்மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்த கோரும் பாடல்களும் அதர்வண வேதத்தில் இருக்கிறது.  இந்த நோய்கள்  மின்னல்களால் ஏற்படுவதாக வேதகால மக்கள் நம்பினர்.      அதற்கு காரணம் மழையில் நனைந்து நோய் வந்தாலும் கூட அதற்கான குற்றத்தை  தானியங்களை  விளைவிக்க வரும் மழையின் மீது சுமத்த வேதகால மக்கள் விரும்ப வில்லை வானை கிழித்து கண்ணை பறிக்கும் மின்னல் மீது சுமத்தினால் நன்றி கொன்ற தன்மையிலிருந்து தப்பித்து விடலாம் என்று நம்பினார்கள்.  மின்னலால்தான் ஜூரம் நோய் வருகிறது என்ற நம்பிக்கையில் எழுந்த பாடலை பார்ப்போம்.

மேகங்களின் கருப்பையில் இருந்து சிவப்பு வண்ண எருது ஒன்று வெளிவருகிறது. காற்றும் மழையும் இடியும் அதன் பிரசவத்தை கவனித்துக் கொள்கின்றன.  அப்படி பிறக்கும் மின்னல் என்னும்  எருது நம்மீது பாயாமல் நேராக போகட்டும். காரணம்  அவன் அடிக்கடி  வராவிட்டாலும் அத்திமரப்பூ போல் தாக்குதலுக்கு ஒரு முறை ஆளானாலே போதும் நாம் சின்னாபின்னமாகி விடுவோம். குளிர்  நோய்களின் அன்னை மின்னலே ஆகும்.  இவனால் தொடப்பட்டவர்கள்  நிம்மதியை இழந்து விடுவார்கள்.  நம்மை இவன் ஒடுக்குகிறான்,  வதைக்கிறான், நடுநடுங்க செய்கிறான்  இவன் இறங்குவதற்கான இடம் மலைகளும் வெட்ட வெளிகளும் தான் எங்கள் வீடுகள் அல்ல 

அதோ விண்ணை நோக்கி மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.  பாம்புகளைப் போல்  மலைகள் படுத்து கிடக்கின்றன.  வெட்டவெளி  பிரதேசமோ மடிவிரித்த அன்னை போல் மலர்ந்து கிடக்கிறது. நீ அவர்களை தாக்கு அவர்கள் பலவான்கள் பதிலுக்கு அவர்கள் உன்னை தாக்குவார்கள் அல்லது உனது  தாக்குதலையாவது தாங்கி  கொள்வார்கள். பலசாலிகளை விட்டுவிட்டு பலஹீனர்களை தாக்குவது வீரனுக்கு அழகல்ல சண்டை  போட  தகுந்த மல்லர்கள் இருக்கும் போது குழந்தைகளிடம் மல்லுக்கு நிற்பது  பாராட்டக் கூடிய செயலாகாது அதனால் எங்களை விட்டு விடு நாங்கள் இன்னும்  கொஞ்ச காலம் வாழ விரும்புகிறோம் அதற்குள் எங்களை விறகுகளின் மேடைகளில் படுக்க வைத்துவிடாதே. நாங்கள் இந்த மண்ணில் நெடுங்காலம் வாழு ஆசை படுகிறோம்.  நூறு  கோடை காலத்தையும் நூறு குளிர் காலத்தையும் பார்க்க விரும்புகிறோம். இந்திரனும்அக்னியும்பிரகஸ்பதியும் இதற்கான வரத்தை தர சித்தமாக இருக்கிறார்கள்.  மரண தேவன் கரம் நீட்டி அழைக்கும் பொழுதெல்லாம் எங்களை காப்பாற்ற தேவாதி தேவர்கள் தயாராக இருக்கிறார்கள்.   நல்ல பழங்கள் கனிந்து தொங்கும் போது அதை விட்டுவிட்டு பச்சை காய்களை கடித்து துப்பும்  குரங்கை போன்று எங்களை குதறி விடாதே மற்ற தேவர்கள் எங்கள் மீது கருணையை பொழியும் பொழுது நீ மட்டும் நெருப்பை உமிழ்வது நீதியாகாது.

வாயு தேவனே நீ அண்ட சராசரங்களில் உணர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ இடங்களில் தங்கி இருக்கிறாய்.  இந்த பூமியும் நீ வாழுகின்ற இடமாகும் அது மட்டுமல்ல எங்களது உடலும் நீ வாசம் செய்யும் பகுதியே ஆகும். நீ உள்ளே  போகிறாய்.  வெளியே வருகிறாய் நாங்கள் தூங்கும் போதும் மயங்கும் போதும் கூட நாங்கள் அறியாமையிலேயே நீ இந்த செயலை செய்துகொண்டிருக்கிறாய் தயவு செய்து இத்தகைய வேலையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக எங்களிடத்தில் செய் உனது பயணத்தை எங்களிடம் இருந்து நீ துண்டித்துக் கொண்டால் மரணத்தில் வலையில் நாங்கள் விழுந்து விடுவோம்.  யம ராஜனை வெல்லும் தகுதி உனக்குதான் இருக்கிறது. கரங்களை கூப்பி சிரங்களை தாழ்த்தி உன்னை வணங்குகிறோம்.  நமது உறவு வெகு நாள் நீடிக்க வேண்டும்.   

மனிதனே நீ மயங்காதே உனது நினைவுகளை  தவறவிடாதே!! ஆயிரம் கயிறுகள் விண்ணை  நோக்கி உன்னை இழுத்தாலும் மண்ணில் இருக்க தைரியத்துடன் போராடு. ஆத்மாவை உதறித் தள்ள விரும்பாதே. யம தூதர்கள் உன்னை அழைக்கலாம், வண்ண மயமான சொர்க்கம்  உன் கண்ணில் தெரியலாம், அதனால் தூதர்கள்  பின்னால் செல்ல நினைக்காதே, இந்த மண்தான் உனது வீடு இதை மறக்காதே, மருந்துகளை ஏற்றுக் கொள்ள தயங்காதே, இதை ஏற்றுக் கொள்ள உன்னை பயம் தடுக்கிறதா? யமனை விரட்டும் போர் வீரர்கள் உன்தாயும் தகப்பனும் சகோதரியும், சகோதரனும் மருந்துகளே ஆகும்.

நோய்கள் உன்னை வதைக்கும் விதத்தை பார் எதற்கும் உதவாவதனாக அவைகள் உன்னை மாற்றுகிறது.  பாறைபோல் உன்மேல் ஏறி அமாந்து கொண்டு அழுத்துகிறது. ஆற்றில்  துவைத்த துணியை ஈரம் போக பிழிவதை போல் உன் சரீரத்தையும் பிழிந்தெடுக்கின்றனர். நோய் என்னும் கொடிய  மிருகத்தை கொன்று வீழ்த்தும் ஆயுதம் தான் மருந்துகள் இந்த மருந்து உனது உடலுடன் கலந்து விட்டால் நோய்கள்  வந்த வழியே இந்திரனைக் கண்டு அசுரப்படைகள்  போல் ஒடி ஒளிந்து விடும். இன்னும் பல நோய்களை பற்றியும் அவைகளை விளக்குவதை பற்றியும் ஏராளமான பாடல்களில் விவரித்து கூறப் பட்டுள்ளது.  அவைகளெல்லாம் ஏறக்குறைய இப்போது கூறப்பட்ட பாடல்களின் சாயலிலே இருப்பதனாலும் அதை பயன்படுத்தும் முறைகளை பற்றி நாம் இப்போது பேசப் போவதில்லை என்பதாலும் வேறு வகையான பாடல்களை  சிந்திப்போம்...மேலும் பயணிப்போம் ....கே எம் தர்மா...

1 comment:

  1. அதர்வண வேதம் பகுதி ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லா விட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர் என்பதை விலாக்குகின்றது. எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்புதான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன. இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது. அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் !!!!

    ReplyDelete

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!