Search This Blog

Dec 15, 2011

இனியவை நாற்பது : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்



இனியவை நாற்பது - (பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பு)  : தமிழும் இலக்கியங்களும்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 


நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்
,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
இன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு".

இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை..
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆகிய பதினோரு நூல்கள்.
 
அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.

புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

*********************************************************************************
இனியவை நாற்பது:-
பூதன் சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக் காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. 

எடுத்துக்காட்டு: சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கர்ப்பித்தல் மிகவும் நல்லது: கற்றறிந்த பெரியோர்களைத் துணைக் கொண்டு வாழ்தலும் மிக நன்ற; சிறிய அளவிலாயினும் தேவைப் படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:

சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது.

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராய் ருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. 

இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

இனியவை நாற்பது - மூலம் கடவுள் வாழ்த்து:
 
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

(அருஞ்சொற்பொருள்: கண்மூன்றுடையான்- சிவபெருமான்; துழாய்மாலையான்- திருமால்/பெருமாள்; முகநான்குடையான்- பிரமன்; ஏத்தல்-போற்றித்துதித்தல்.)

நூல்: பாட்டு: 01

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
நற்சவையில் கைக்கொடுததல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

(அருஞ்சொற் பொருள்: நற்சவை- நற்சபை/நல்அவை; கைக்கொடுத்தல்- உதவுதல்; சாலவும்- மிகவும்; தெற்றவும்- தெளிவாக; மேலாயார்- பெரியோர்கள் / மேலானவர்; சேர்வு - சேர்ந்திருத்தல் / துணைக் கொள்ளுதல்)
 
இனியவை நாற்பது பாடல்கள் விளக்கங்களுடன் எட்டு பதிவுகளில் கீழேகண்ட வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காண விருப்பம் கொண்ட அன்பர்கள் http://keyemdharmalingam.blogspot.com/ இணைப்பினைச் சொடுக்கி - இனியவை நாற்பது பாடல்களும் விளக்கங்களும் என்ற தலைப்பில் - கண்டு, படித்து, ரசித்து களிக்க வேண்டுகின்றேன். மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே!!  இனியவை நாற்பதின் பாடல்களின் ஊடாக.. நாமும்தான்.. கண்டு களித்து, படித்து ரசித்து, வாழ்க்கையில் கைக் கொள்ளுவோமே!! இனிய வாழ்கை அமைய வேண்டி... தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது கார் நாற்பது  ..... அன்புடன் கே எம் தர்மா...
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!