Search This Blog

Dec 15, 2011

இன்னா நாற்பது: பதினெண் கீழ்கணக்கு நூல்கள்.


பதினெண் கீழ்கணக்கு:
தமிழகத்தில் சங்கம் மருவிய காலகட்டத்தில் இயற்றப்பட்ட
18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில்தான் அகம், புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடைய தாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப் படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை.
 நூல்வகைகள்: பதினெண் கீழ்கணக்கு நூல்கள் குறித்த வெண்பா: 
"நாலடி,நான்மணி,நா நாற்பது,ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை,பழமொழி, மா மூலம்,
ன்னிலைந் காஞ்சியோடு,ஏலாதி என்பவே
கைந்நிலைய   வாம்கீழ்க்கனக்கு".

 
இத்தொகுதியில் அடங்கிய நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினோரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று மட்டும் புறத்திணை நூல். இந்நூல்கள் அணைந்ததும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.  
நீதி நூல்கள்: திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக்காஞ்சி,
ஆகிய பதினோரு நூல்கள்.
 

அகத்திணை நூல்கள்: ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது ஆகிய ஆறு நூல்கள்.
 
புறத்திணை நூல்கள்: களவழி நாற்பது - ஒரு நூல் மட்டுமே.

****************************************************

கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இந்நூல் பதினெண் கீழ்கணக்கு என்ற சங்கம் மருவிய காலத்தமிழ் நூற்தொகுப்பில் இடம் பெறுகிறது. உலகில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.

எடுத்துக் காட்டு:-  அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற சபையிலே அறிவில்லாத ஒருவன் புகுவது துன்பத்தைத் தரும். இருட்டிய பின்னர் தனி வழியிற் செல்வது பெரிதும் துன்பம் விளைவிக்கும். மிலையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல இல்லாதவர்களுக்குத் தவம் துன்பம் தரும். தன்னை பெற்ற அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் விடுவதும் துன்பமாகும் என்று மனித வாழ்வில் துன்பத்துக்குரிய நான்கு விடயங்களைக் கூறி நீதி புகட்டும் கீழ்காணும் பாடல் இந்நூலில் வருகின்றது.
 
ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல்.

இன்னா நாற்பது:-  நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப் பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும், இன்பம் தரும் செயல்களும் இன்னின்னவை எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட ‘இன்னா’, இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. 

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது. இந்நூலை இயற்றியவர் கபில தேவர். ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.
இன்னா நாற்பது பாடல்கள் விளக்கங்களுடன் எட்டு பதிவுகளில் கீழேகண்ட வலைப்பூவில் இன்னா நாற்பது என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. "Keyemdharmalingam.blogspot.com/" http://keyemdharmalingam.blogspot.com/ காண விருப்பம் கொண்ட அன்பர்கள் இணைப்பினைச் சொடுக்கி கண்டு, படித்து, ரசித்து களிக்க வேண்டுகின்றேன். மேலதிக பார்வைக்குக் காண்க:- இன்னா நாற்பது: http://tawp.in/r/6pp

மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே!!  இன்னா நாற்பதின் பாடல்களின் ஊடாக.. நாமும்தான்.. கண்டு களித்து, படித்து ரசித்து, வாழ்க்கையில் கைக் கொள்ளுவோமே!! இனிய வாழ்கை அமைய வேண்டி... தமிழ் சங்க இலக்கியங்களைத் தேடி. அடுத்து நாம் காணப் போவது இனியவை நாற்பது ..... அன்புடன் கே எம் தர்மா...
 

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!