Search This Blog

Dec 12, 2011

சிவவாக்கியம் (276-280) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (276-280)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -276
பொய்யுரைக்க போதமென்று பொ
ய்யருக் கிருக்கையால்.     
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெ
ய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மை தன்னை வாய் திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே.
 

இப்பூவுலகில் தங்களையே சாமி என்றும், ஞானிகள், சித்தர்கள் என்றும் அவதாரம் எடுத்து வந்த ஆச்சாரியார், குருவென்றும் சொல்லிக் கொண்டு
மாறுவோர்களை ஏமாற்றி பொய்யான உபதேசங்களைக் கொடுத்து அந்தப் பொய்யாலேயே பணம், பொருள் போன்றவைகளை சம்பாதித்து சகலவித சௌபாக்கியங்களோடு வளமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படி பொய் வேடமிட்டு பொய்யையே பிதற்றி திரிந்து இறந்துபோய் எரிகின்ற தீக்கும் மண்ணில் புதைந்து நாய் நரிக்கும் புழுவுக்கும் இரையாக வேண்டும் என்பதே அவர்களுக்கும் விதியாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட சிலரிடம் உண்மையை விரும்பும் சில நல்லவர்கள் கூட உண்மை ஞானத்தை உணராமல் அடிமைப்பட்டு இறைப்புகழை மறந்து சாகப்போகும் மனிதரை கடவுளாக்கி துதி பாடி இவ்வுடம்பில் கொண்டிருக்கின்றார்கள். உண்மையை அறிந்துணர்ந்த ஞானிகளும் உண்மையானவர்கள் யாரும் உண்மையில் இல்லை என்று உண்மையை உபதேசிப்பது இல்லை. இதனால் இறைவனைத் தவிர எதற்கும் அஞ்சாமல் இருந்த நான் மெய்ப்பொருள் உண்மையை வெளிப்படையாக சொல்ல முடியாமல் அஞ்சினேன். நமசிவாய என்பது என்ன என்பதை எனக்கு ஞானம் போதித்து கற்றுத் தந்து தெளிவித்த என் குருநாதனே! என் மனம் நொந்து போகச் செய்வது ஏனோ?
 
   
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -277
ஒன்றை ஒன்று கொன்று கூட உணவு செய்து இருக்கினும்
மன்றினூடு பொய் களவு மாறு வேறு செய்யினும்
பன்றி தேடும் ஈசனைப் பரிந்து கூட வல்லிரேல்
அன்று தேவர் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.
 

இயற்கையிலேயே ஒன்றை ஒன்று கொன்று தின்னும்படியாகவே உணவு அமைந்துள்ளது. தவளையைக் கொன்று பாம்பும், பாம்பைக் கொன்று கீரியும், மானைக் கொன்று புலியும் தின்பதாகவே அமையப் பெற்றுள்ளது. உலக வாழ்க்கையில் பொய், திருட்டு, ஏமாற்று போன்றவைகளை செய்தே வாழ வேண்டியுள்ளது. இவை யாவும் அறிந்து தெளிந்து இவ்வாழ்வை வெறுத்து மீண்டும் பிறவா நிலை பெற சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சாதனையில் ஈடுபடுங்கள். பன்றி வடிவம் எடுத்து பூமியைத் தோண்டி தேடிய விஷ்ணு ஈசனின் திருவடியை நாடியது போல அவ்வீசனை உங்களுக்குள்ளேயே தோண்டி தேடி அறிந்து பரிவுடன் யோக ஞான சாதகம் செய்து தியானியுங்கள். உண்மையை அடைய உறுதியுடன் முயற்சித்து பாடுபடுங்கள். அப்போது ஈசன் ஆதிதேவனை உங்களுக்குள்ளேயே சோதியாக தோன்றி நினைவாய் நின்று கொண்டிருப்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -278
மச்சகத்துளேயிருந்து மாயை பேசும் வாயுவை
அச்சகத்துளேயிருந்து அறிவு
ர்த்தி கொள்வீரேல்
அச்சகத்துளேயிருந்து
அறிவுர்த்தி கொண்ட பின்
இச்சை அற்ற எம்பிரான் எங்கும் ஆகி நிற்பனே.  
 
இருந்து உயிரில் மறைவாய் இயங்கும் பிராணனான காற்றானது வெளியேறி உயிர் போக காரணமாகிறது. இதை உணர்ந்து அப்பிரானை அங்கேயே ரேசக  பூரக கும்பகம் எனும் பிராணாயாம பயிற்சியினால் காற்றைப் பிடித்து உயிரை வளர்க்கும் வழியை அறிந்து கொள்ளுங்கள். அவ்வுடம்பிலேயே பிராணாயாமத்தை அப்பியாசித்து ஆன்மாவை அறிந்து கொண்டு அறிவை உணர்ந்து பின்னால் எல்லாம் ஒன்றாக பொருத்தி எந்த ஆசையும் இல்லாத ஈசனே எங்கும் பிரமமாய் ஆகி நிற்பதை எல்லா உயிரிலும் கண்டு கொள்ளுங்கள். 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 279
வயலிலே முளைத்த செந்நெல் களையதான  வாறுபோல்
உலகினோரும் வன்மை கூறில் உய்யுமாறது எங்
னே  
விறகிலே முளைத்தெழுந்த மெய்யலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்த நாடு பட்ட பாடதே.
 .
வயலிலே முளைத்த செந்நெல்லே சரியான கவனிப்பின்றி களையாக மாறுகின்றது. அது போல பிறவி எடுத்த நோக்கம் அறியாது உயிர் இறைவனை அடையாது பிறவிப் பிணி அடைகிறது. உலகிலுள்ள மனிதர்கள் இவ்வுண்மையை உணராது நான் எனது என்று வண்மைகள் பேசிக் கொண்டிருந்தால் இப்பிறவிப் பிணியிலிருந்து உய்யும் வழி எங்கனம். விறகிலே முளைத்து எழுகின்ற தீயைப் போல் நமது உடம்பிலேயே சோதி மெய்யாக இருப்பதை உணராமல் மெய்யாகிய உடலே பொய்யாகி மாண்டு நரகத்திலே விழுந்து மீண்டும் மீண்டும் பிறந்து இருந்து இறப்பதே இவ்வுலகில் துன்புற்றும் இன்புற்றும் மறைவதே நடந்து வருகின்றது.         
   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 280
ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்று நீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்த தொன்றை ஒர்கிலீர்
காடு நாடு வீடு விண் கலந்து நின்ற கள்வனை
நாடியோடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே. 

உங்கள் உடலுக்குள்ளேயே நின்று நட்டம் புரிந்து ஆடிக் கொண்டிருக்கும் ஈசனை அறியாமல் அங்கும் இங்கும் இருப்பதாகக் கூறி தேடுகின்ற பாவிகளே!! தெளிந்த மெய்ப்பொருளாக விளங்கும் ஒன்றை அறிந்து அதனையே ஒரே நினைவுடன் தியானிக்கத் தெரியாமல் இருக்கிறீர்கள். காட்டிலும், நாட்டிலும், வீட்டிலும், ஆகாயத்திலும் என்று பார்க்குமிடமெங்கும் பரந்து நின்ற கள்வனான ஈசனை அறிந்து அவனையே நாடி ஓடி தனக்குள்ளேயே நயந்து உணர்ந்து தியானித்துப் பாருங்கள்.
.
        
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!