Search This Blog

Dec 11, 2011

சிவவாக்கியம் (271-275) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (271-275)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -271
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்ற ஆதி தேவனே
எட்டுமாய் பாத மோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே.   
 
 

எட்டாகிய எண்சான் உடம்பில் எட்டாகிய அகரமான அறிவாகவும், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், இடம்பம், அகங்காரம் எனும் எட்டு ராகங்களாகவும்
எண்குலங்களாகி ஒன்றான ஏழாம் நிலையான சகஸ்ராரத்தில் ஏழு திரைகளாகவும், இரசம், இரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மச்சை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாகவும், சரிகமபதநீ எனும் ஏழிசை ஸ்வரங்களாகவும், எட்டும் ஒன்றும் ஒன்பதான மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், வெப்பமான அனல் நட்சத்திரம் ஆகிய ப்ர+நவம்,  அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமாகி ஆதியாக நின்ற தேவனே ஈசன். அவனை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அட்டாங்க யோகத்தினால் அகரமாகிய திருப்பாதத்தினைப் பற்றி கண்ணீர் மல்கி கரைந்துருகி நினைந்த வண்ணம் எட்டெழுத்தான அஉம் சிவயநம என்ற அட்சரத்தால் நிலைநிறுத்தி ஓதி தியானிப்பவர்கள் துன்பங்களை யாவும் நீங்கி இறையருள் பெற்று இன்புடன் வாழ்வார்கள்.  
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -272
பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழிநோடும் ஒன்பதாய்
பத்து நாற் திசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்துமாய் கொத்தமொடும் அத்தலம்மிக் காதி மால
பத்தர்கட்கலாது முத்தி முத்தி முத்தியாகுமே.
 

இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குக்கு எனும் பத்து நாடிகலாகவும்; பிராணன், அபாணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்ற தச வாயுக்களாகவும்; ஓர்  ஏழினோடும் எட்டாகிய உடம்பில் ஒன்பது வாசல்கள் வழியாக இயங்கி நடந்து வருகிறது. இதில் நாற்பத்து முக்கோணமாய் விளங்கும் ஞானமாகிய வீட்டில் நிலைநிறுத்தி தியானிப்பதின் நன்மையால் எட்டிரண்டும் பத்தாகிய யகாரமான ஆகாயத்தலத்தில் ஆதி அந்தமாகவும் சிவனாகவும் திருமாலாகவும் உள்ள பரம்பொருள் அதுவென அறிந்துணர்ந்து சேர்வார்கள். இது யோக ஞானத்தை விரும்பிப் பயிலும் பக்தர்களுக்கு முத்தியை ஈயும் ஒன்றான சோதியாகிய ஈசனை சேர்ந்து முக்தி வாய்க்கும். 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -273
வாசியாகி நேசம் ஒன்றி வந்தெதிர்ந்த தென்னுக
நேசமாக நாளுலாவ நன்மை சேர் பவங்களில்
வீசி மேல் நிமிர்ந்த தோளி யில்லையாக்கினாய் கழல்
ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே.. 
மெய் பக்தியினாலும் குரு விசுவாசத்தினாலும் மெய் அன்பினாலும் மெய்ப் பாட்டினாலும் அரிய வாசியோகம் கிட்டி ஞானம் என்னுள் வந்து சேர்ந்தது. இந்த வாசி யோகத்தை நேசமுடன் எந்நாளும் விடாது பயிற்சி செய்து வரும் சாதகர்களுக்கு பாவங்கள் யாவும் அகன்று நன்மைகளும் புண்ணியமும் சேர்ந்த மெய்யனுபவம் கிடைக்கும். அவ்வாசியே உற்ற துணையாகி மேலேறி சகஸ்ரதளத்தில் சேர்ந்து வெளியாக வீசி நிமிர்ந்திருக்கும் சோதியான ஈசன் திருவடியை அடையும். அவன் கழலடியே ஈடு இணை ஏதும் இல்லாத உண்மை என்பதை உணர்ந்து உலக ஆசைகளில் விழாது வாசியை மறக்காது தொடர்ந்து செய்து அமரர்கள் போல் பிறவா நிலை பெற்று பேரின்பம் அடைந்து தேவர்கள் ஆகுங்கள்.    

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 274
எளியதான காய மீதும் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியும் குலாவி நின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.
 .
எளிமையான என் உடம்பின் உள்ளே ஈசனாகிய எம்பிரான் இருக்கும் இடம் என்றும் நித்தியமாக நிலையாக நிற்கின்ற ஓங்காரமாகி;  அகாரமாகவும், உகாரமாகவும் அமைந்துள்ளது. அவ்விடத்திலேயே பிறவி அடையும் பேறான ஈசன் அருட்பெருஞ்சோதியாக உலாவி நின்று கொண்டிருக்கின்றான். அவன் வெளிப்படையாக ஆகாயமான ஒன்றிலே மெய்ப்பொருளாக வழங்கி சிவயநம என்ற பஞ்சாட்சரமாய் விளைந்து அதுவாக இருப்பதை அறிந்துணருங்கள்       
   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 275
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்த பின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே.

நமசிவய என்ற அஞ்செழுத்து பஞ்சாட்சரமென்றும்;  அ, உ, ம் என்ற மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் கூறி உச்சரிக்கும் அன்பர்களே, நீங்கள் காணும் அந்த மெய்ப்பொருள்
அஞ்செழுத்தாகவும் , மூன்றெழுத்தாகவுமா இருக்கிறது. அஞ்செழுத்தின் நடு எழுத்தான சிகாரத்தை அறிந்து அதனை சிவயநம என செபித்து அவ்வெழுத்தாக இருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் நிறுத்தி உணர்ந்து தியானித்தால் ஒரேழுத்தாக உயிரில் உறையும் ஈசனே அஞ்செழுத்தாகவும் மூன்றெழுத்தாகவும் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள்.
        
 
***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!