Search This Blog

Dec 3, 2011

சிவவாக்கியம் (231-235) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (231-235)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -231
சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல் முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங் கடந்து சொல்லும் நாடி யூடு போய்
அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே.
பூஜ்யமாக ஒரேழுத்தாக உள்ள பிரம்மத்தை அறிந்து அதையே உன்னிப்பாக பார்த்து குரு சொல்லித் தந்த முகத்தில் இருத்தி, துன்பத்தையும், இன்பத்தையும் அனுபவித்தது அது என உணர்ந்து சுழுமுனை நாடியில் மவுனத்திலேயே ஊன்றி தியானம் செய்யுங்கள். அறிவு, உணர்வு, மனம் ஆகியவை அமைந்திருக்கும் ஓங்காரத்தில் ஒலியை எழுப்பி ஆறுமுகமாக விளங்கும் சூட்சும உடம்பில் உள்ள ஒலியுடன் இணையுங்கள். அங்கெ வெளிக்கு உள் வெளி கடந்து அருட்பெரும்ஜோதியான ஆண்டவனைத் தரிசித்து சும்மா இருக்கும் சுகம்தனை பெறலாம்.
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -232 

விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே!

விழித்திருக்கும் அகக்கண்ணை நோக்கி எண்ணங்களை அங்கேயே குவித்தால் ஓங்காரம் பஞ்சாட்சரம் என்ற எழுத்துக்கள் எல்லாம் அங்கேயே அடைந்து போய் மெய்யான மவுனம் கிட்டும். இந்திரியங்களால் விளைந்த வீடாகிய உடலில் உள்ள ஆகாயத்தில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கையும் அங்கேயே அழுத்தி நிறுத்தி உடலையும் உயிரையும் ஒன்றாக்கி ஆதியாகிய சந்திரனில் மயங்கி அங்கே உள்ள அமிர்தத்தை உண்டு அனுபவிக்கும் நேரத்தில் ஈசனாகிய அவனைத் தவிர நான் என்ற உடலில் உயிர் இல்லை வேறு யாரும் இல்லை என்று ஆனது.

 
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -233
நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர்
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே
எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால்
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே!
.  
ஆண்டவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும் என்று அதற்கு தேவையான அபிஷேகப் பொருள்களை நல்லதாகப் பார்த்து நாடி நாடி தேடி ஓடுகிறீர்கள், நமக்குள்ளேயே நல்ல மஞ்சனங்கள் உண்டு, நாதனான ஈசன் உண்டு என்பதை அறிவீர்ர்களா!! நமக்குள் எல்லையாக இருக்கும் மனமாகிய வெளியில் நல்ல எண்ணங்களால் மனமுருகி அபிஷேகம் செய்து ஒரே மனதாக ஈசனை எண்ணி தியானியுங்கள். தில்லைஎனும் ஆகாயத்தலத்தில் சீவனாக விளங்கும் உயிர் சிவனின் திருவடியை சேர்ந்து இன்புறும்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 234
உயிர் அகத்தின் நின்றிடும் உடம்பெடுத்தற்கு முன்
உயிர் அகாரம் ஆயிடும் உடல் உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால்
டம்புதான் எடுப்பவாறு உரைக்கினே.
 .
உடம்பு எடுப்பதற்கு முன் உயிர் அகத்தில் உள்ள ஆகாயத்தில் நின்றி
ருக்கும். உயிர் அகாரமான சிவனாகவும் உடம்பு உகாரமான சக்தியாகவும் இருந்திடும். உயிரையும் உடம்பையும் ஓடு சேர்ப்பது மெய்ப்பொருளாக விளங்கும் சிவம். இவ்வாறு உயிர் உடம்பெடுத்து வந்ததை உணர்ந்து யோக ஞான சாதகன்களால் சிவத்தை தியானித்து பிறப்பில்லா இறவா நிலையை அடையுங்கள்.   
     

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 235
அண்டம் ஏழும் உழலவே அனந்த யோனி உழலவே
பண்டைமால் அயனுடன் பறந்து நின்று உழலவே
எண்திசை கடந்துநின்ற இருண்ட சத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதை ஆதி நட்டம் ஆடுமே.
 
அண்டங்கள் ஏழும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. அனந்த கோடி யோனியில் பிறந்த உயிர்களும் சுற்றி உழன்று கொண்டிருக்கின்றது. உங்கள் உடன்பில் விஷ்ணுவும், பிரமனும் உள்ளே இருந்து உழன்று கொண்டு காத்தும், படைத்தும் வருகிறார்கள். எண்திசைக்கு அப்பாலாய் கடந்து நின்ற இருளான சக்தி உழலவே அண்டரண்டம் அனைத்தும் ஒன்றதாய் நின்ற ஆதி உனக்குள் ஆடி நின்றதை உணருங்கள்.
 

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!