Search This Blog

Dec 3, 2011

குரு பரம்பரை:- படித்ததில் பிடித்தது. (ஆன்மீக தீப்பொறி)பகுதி-2


குரு பரம்பரை:
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று 
சொல்லுகின்றார்களே! எதனால் என்பது இதுவரையிலும் புரியாமல் இருந்தது. ஏனெனில் நம்பத்தகுந்த விதமல்லாது அல்லது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் காணப்படும் கருத்துக்களை காணும் பொழுது வியப்பாக உள்ளது.  
 
இணைய தளத்தில் உலவும் பொழுது, கடாரத் தமிழ்ப் பேரறிஞர்  டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்களின் வலைத்தளம் பார்க்க நேர்ந்தது. அதில் முனைவர் எஸ். ஜெயபாரதி அவர்கள் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை பகிர்ந்ததை காண முடிந்தது. அனைத்து பதிவுகளும் அறிந்து கொள்ள வேண்டிய தலைப்புக்களை தேர்ந்தெடுத்து சரள நடையில், அனைவருக்கும் எளிதில் புரியும்படியும், தக்க சான்றுகளோடும் பகிர்ந்துள்ளார். 

அதில் ஒன்றுதான் இந்த குருபரம்பரை விளக்கச் சிறுகதை. சித்தம் தெளிய, சித்தி அடைய எவ்விடத்திலிருந்தும் தூண்டுதலோ, விளக்கமோ, வியாக்கியானமோ கிடைக்க வாய்ப்பு உள்ளதனை காணக் கொடுத்துள்ளார். நாமும்தான் அதனை காண்போமே இனிய நட்புக்களே!!!
*********************************************************
இதற்கு முந்தைய  பதிவின் தொடர்ச்சி இது ஆகும். அப்பதிவினைக் கண்டபின் தொடரவும்......
கே எம் தருமா..(KeyemDharmalingam): குரு பரம்பரை:- படித்ததில் பிடித்தது. (ஆன்மீக தீப்பொறி) ....தொடர்க...

ஒருநாள் ஒரு குளக்கரையில் நின்றுகொண்டு கையில் இருந்த குவளையால் தண்ணீரைச் சேந்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாய்  வந்தது. கடும் தாகம் அதற்கு. வேகமாக வந்த நாய் அந்தக் குளத்தில் குதித்தது. பின்னர் தண்ணீரை ஆசைதீருமட்டும் ஆனந்தமாகக் குடித்தது.

அந்த நாயைப் பார்த்ததும் எனக்குப் பொறிதட்டியது. உடனே கையில் இருந்த குவளையைத் தூர எரிந்தேன். கரையில் இருந்த என் உடமைகளை எடுத்தேன் அவற்றையும் குளத்தில் வீசி எரிந்தேன். எந்த உடமையுமே இல்லாமல் அந்த நாய் இந்த உலகில் வாழவில்லையா?  என்னைப் படைத்த இறைவன் இருக்கிறான்.

பற்றற்றதன்மையையும் சரணாகதித் தத்துவத்தையும் நான் அப்போது உணர்ந்து கொண்டேன். அதை உணர்த்தியது அந்தநாய். அந்த நாய்தான் என்னுடைய முதல்குரு.

அதன்பின்னர் நான் ஊர் ஊராகச் சுற்றும்போது உடல்நலிவு ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் மயங்கிப்போய் ஒரு மரத்தடியில் நான் கிடந்தேன். அப்போது அங்கே வந்த ஓர் ஆள் என்னைக் கைத்தாங்கலாகத் தாங்கிச் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
வீட்டுக்குள் நுழையப்போகும்போது அவன் சொன்னான். ஐயா சாமியாரே! நான் ஒரு திருடன். என் வீடு இது. உள்ளே வருவதற்கு உங்களுக்கு மனச்    சமாதானம்தானே?    
நான் சற்றுத் தயங்கினேன். அவன் தொடர்ந்தான். நான் ஒரு திருடன் என்பது யாருக்கும் தெரியாது. என்னுடைய  குலத்தொழிலே திருடுவதுதான். அந்தத் தொழிலைத் தவிர வேறெதுவும்  தெரியாது. ஆனால் அக்கிரமமான முறையில் நான் திருடுவதேயில்லை. எனக்கென்று ஒரு தர்மம் வைத்திருக்கிறேன். நிறைய  தானமும்  செய்வேன். இது என்னுடைய வாழ்க்கை முறை".

அப்போதும் தயங்கினேன். நீங்கள் ஒரு துறவி. உங்களைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒரே மாதிரிதான். திருடனோ, வேந்தனோ, துறவியோ அனவரும் உங்கள் கண்ணுக்கு ஒன்றாகத்தான் தெரியவேண்டும். யாரையும் நீங்கள் ஒதுக்கமுடியாது. அது உங்கள் தர்மம்.    நான் திருடன். உங்களைப் பாரமாக நினைக்கவில்லை. என் வீட்டுக்கு உங்களை மனப்பூர்வமாக அழைக்கிறேன். நீங்கள் துறவி. என்னைப் புறம்பாக நினையாது நீங்கள் வரவேண்டும்".

நான் உள்ளே நுழைந்தேன். எனக்குச் செய்யவேண்டியவற்¨றை அவன் செவ்வனே செய்தான். பின்னர் அன்றிரவு அவன் வெளியில் புறப்பட்டான். தொழிலைப் பார்க்க நான் செல்கிறேன். பத்திரமாக இருங்கள், என்று சொல்லிவிட்டுச் சென்றான். காலையில் திரும்பினான். இன்று ஒன்றுமே கிடைக்கவில்லை. பரவாயில்லை. இரவு ஏதாவது கிடைக்கும்", என்று சிரித்த முகத்தோடு சொன்னான்.

அன்றிரவும் சென்றான். காலையில் வெறுங்கையோடு திரும்பினான். ஆனால் சிரித்த முகத்தோடு, "அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்" என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கச் சென்றான். நான் அவனுடன் ஒரு மாதம் இருந்தேன். அத்தனை நாட்களிலும் அவன் எனக்கு வைத்தியமும் செய்து, உணவும் கொடுத்து, கவனமாக என்னைப் பார்த்துக் கொண்டான்.  அத்தனை நாட்களிலும் அவன் திருடச் சென்றுவிட்டு வெறுங்கையுடனேயே திரும்பினான்.

ஆனாலும் அவனுடைய சிரித்தமுகம் மட்டும் மாறியதே இல்லை.  அடுத்த முறை நிச்சயம் கிட்டும், என்பதை அவன் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தான். பிறகு நான் தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கினேன். தியான யோகத்தில் மிகஆழமாக ஈடுபட்டேன். ஆனால் ரொம்ப நாட்களுக்கு மனம் ஒடுங்கவேயில்லை. பலஎண்ணங்கள் தோன்றி அலைக்கழித்தன. சித்திர வதையாக இருந்தது. பலசமயங்களில் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் என்றுதோன்றும்.

 
எப்போது மனது ஒடுங்கும். எப்போது சமாதிநிலை கைகூடும்? எப்போது நம் ஆன்மீகப் பயணத்தில் ஒரு நிறைவெய்துவோம்?' இந்த வேட்கைச் சுட்டெரித்தது. பேசாமல் எல்லா வற்றையும் தூக்கியெறிந்துவிட்டு உலக வாழ்க்கைக்கே திரும்பி விடுவோமா என்றும் தோன்றும். அப்போதெல்லாம்  அந்தத் திருடனின் மலர்ந்த முகமே தோன்றும். "அடுத்தமுறை கிட்டும்" என்னும் அவனுடைய சொற்கள் என் காதுகளில் ஒலிக்கும். ஆகவே விடாப்பிடியாக ஆத்மசாதனையில் ஈடுபட்டேன்.  ஒருநாள் சமாதிநிலையை எய்தினேன். அதனுடன் சேர்ந்து கிட்டும் ஆற்றல்களும் தலைப்பட்டன".

அந்தத் திருடன், 'துறவி' என்னும் என்னுடைய சுயதர்மத்தை எனக்கு போதித்தான். விடாமுயற்சியுடன் ஆத்மசாதனையைப் புரியதூண்டலாக விளங்கினான். என்னுடைய வழியைக் காட்டினான். அந்தத் திருடன்தான் என்னுடைய இரண்டாவது குரு".

பல ஆண்டுகள் கழிந்தன. யோக சாதனைகளைப் புரிந்தும் என்னுடைய சாதனையில்என்னுடைய அறிவில் ஏதோ குறையிருப்பதாகவே தோன்றியது. ஒரு திருப்தியில்லை. என்ன குறையென்று சரிவரப் புரியவுமில்லை. ஒருநாள் இரவு. மண்டபத்தில் இருந்த விளக்கை ஒரு சிறுவன் அணைத்தான். நான் அவனிடம் விளையாட்டாகக் கேட்டேன்:  "அந்த வெளிச்சம், சுடர் எங்கே போயிற்று?" அவன் சொன்னான்: "இது தெரியாதா? அது எங்கிருந்து வந்ததோ, அங்கு போய்விட்டது". அப்போதுதான் இந்த உலகம், பிரபஞ்சம், தோற்றம், என் பிறவி - அனைத்தின் ரகசியமும் புரிந்தது. அதையும் உணர்ந்துதான் கொண்டேன். சொல்லில் வடிக்க இயலாது.

அத்துடன் என் தேடலும் முடிந்தது. என் வேட்கையிம் தீர்ந்தது. தாபமும் மறைந்தது. அதுவரை இல்லாத பரிபூரண திருப்தி என் மனதை ஆட்கொண்டது. திருப்தி வந்தவுடன் ஒரு சாந்தி குடிகொண்டது. சாந்தத்துடன் ஒரு பூரணத்துவமும் ஏற்பட்டுவிட்டது. இப்போது நானும் எங்கிருந்து வந்தேனோ அங்கு போகப்போகிறேன். இதற்கு வழி காட்டியவன் அந்தச் சிறுவன்தான்.  அவன்தான் என்னுடைய மூன்றாவது குரு".

இதனைச் சொல்லியவாறு, துறவி கண்களை மூடினார். ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டார். மீண்டும் வெளியில் விடவேயில்லை.
******************************************************************
இனிய நண்பார்களே எப்பொழுது, யாரால் நமது ஆன்மீக ஊற்றுக்கண் திறக்கப்படும் என்று நம்மால் தீர்மானிக்க முடியாத பொழுது அயர்ச்சியும், தளர்ச்சியும் கொண்டு நமது முயற்சியைக் கைவிடக் கூடாது என்பதற்கு இக்கதை ஒரு விளக்கமாக அமைந்து என்னைத் தெளிய வைத்துள்ளது. இனிய நட்புக்கள் தங்களின் கருத்துப் பின்னூட்டமிட அன்புடன் வேண்டுகின்றேன்.. கே எம் தர்மா...  

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!