Search This Blog

Dec 21, 2011

சிவவாக்கியம் (311-315) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (311-315)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -311
பூவிலாய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய்
தீயிலாத மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
வெயிலாத தோன்றுமாய் வேறு தன்மையாய்
நீயலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே.

இவ்வுலகில் பஞ்ச பூதங்கள் பூமியில் குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்களாகவும், புனலாகிய நீரில் ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என்ற நான்கு வகையாகவும், தீயாக சூரியன், சந்திரன், அக்னி என்று மூன்று வகையாகவும், காற்றில் சிறந்த தென்றலாகவும், சூறாவளிப் புயல் என்ற இரண்டு வகையாகவும், வெளியாகிய ஆகாயம் ஒன்றாகவும் அமைந்து வேறு வேறு தன்மையாய் இருக்கின்றது. அதுவே அஞ்
செழுத்தாகி அதில் சிகரமாக நீ நின்ற நேர்மையை யாவர் காண வல்லவர்கள்.  
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -312
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவு கால் இரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய் சிறந்த வப்பு நான்குமாய்
ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை
சிந்தையில் தெளிந்த மாயை யாவர் காண வல்லரே.

இவ்வுடம்பில் அஞ்செழுத்தாக ஈசன் பஞ்ச பூதங்களாய் ஆகாயம் அந்தரத்தில் மனம் என்ற ஒன்றாகவும், காற்று மூச்சாக வெளிச்சுவாசம் உட்சுவாசம் என்று இரண்டு வகையாகவும், நெருப்பு அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்ற மூன்று வகையாகவும் நீர், இரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என்ற நான்கு வகையாகவும், மண், எலும்பு, நரம்பு, தசை, தோல், உரோமம் என்ற ஐந்து வகையாகவும் அமைந்திருக்கிறது. இந்த பஞ்சபூதங்களிலும் அஞ்செழுத்தாக பரவி அமர்ந்திருந்த நாதனை சிந்தையில் நினைந்து மாயை தெளிந்து ஞானம் நிரந்து தியான தவம் புரிந்து காண வல்லவர்கள் யார்?   
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -313
மன விகாரம் அற்று நீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும்    

அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேணுமேல்
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே.
  
மனம் சந்தேகங்கள் யாவும் தீர்ந்து நீர் இறைவனையே மதித்து தியானிக்க வல்லவரானால் மனமோ, எண்ணமோ, நினைவோ இன்றி அம்மனமே மணியாகவும், விளக்காகவும் விளங்கி நித்தியமாகி நின்றிடும். இதனை அறிந்து அனைவரும் சிவயநம எனும் பஞ்சாட்சர மந்திரத்தையே ஓதி வந்தால் நான்கு வேதமும் உணர்த்தும் அகத்திலேயுள்ள மேலான மெய்ப்பொருளை உணரலாம். கனவு கண்டது உண்மையாக உள்ள நீரே என்பதை தெரிந்து தெளிந்திருப்பது சிவமே.    
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 314

இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா       
     
சுட்ட மண் கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா
முட்டி நின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
   . 
யாகம் செய்ய அமைக்கும் யோனி குண்டம் எதற்காக? அதிலே ஓதும் ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் சொல்வது என்ன? அக்கு சுட்டம
ண் கலயங்களிலே நூல் சுற்றி நீர் நிறைத்து வைப்பது எதற்காக? யாகத்தில் நெய்யூற்றி தீயை வளர்ப்பது எதற்காக? இவை யாவுமே உனக்குள்ளே சோதியாக இருக்கும் ஈசனை அறிவதற்கல்லவா? உன் உடம்பில் சூரிய, சந்திர, அக்னி மண்டலங்களில் உள்ள தீ சுழுமுனை எனும் தூணில் முட்டி நின்று அங்கே முளைத்து எழுந்த சோதியை பற்றி நின்றது எது என்பதை உணர்ந்து பற்றி நில்லுங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 315
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடிநின்றதும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே.
  . 
தண்ணீரிலேயே முளைத்து வளர்ந்த தாமரை இலையா
னது நீரோடு கூடி நின்றாலும் நீர் ஒட்டாத தன்மையைப் போல், மண்ணாலான இவ்வுடலில் வித்தாக முளைத்தெழுந்து ஒட்டியும் ஒட்டாமலும் உள்ளது, யாவும் அறிந்த பரம்பொருள், இவ்வுலகில் அனைத்திலும் கூடி நின்றும் எதுவும் பற்றாத தன்மையோடு நின்று நம்மைக் கூத்தாடுபவனின் பண்பையும் கருணையையும் கண்டு அவன் நினைவோடு நினைந்த வண்ணம் தியானித்து இருப்பீர்.

***************************************************

http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!


No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!