Search This Blog

Dec 15, 2011

சிவவாக்கியம் (286-290) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (286-290)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -286
பத்தொடுற்ற வாசலில் பறந்து மூல வக்கர
முத்தி சித்தி தொந்தமென்று இயங்குகின்ற மூலமே
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே 
மத்த சித்த ஐம்புலன் அமைந்ததே சிவாயமே.
    
ஒன்பது வாசல் கொண்ட கூடமாகிய உடம்பில் பத்தாம் வாசலை அறிந்து, அதுவே யாவிற்கும் மூலமாக நிற்கும் ஒரேழுத்து அட்சரமே பரம்பொருளாக பரந்து நிற்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுவே முத்தி பெறுவதற்கும் சித்தி அடைவதற்கும் மூலமாய் இயங்கும் பிரம்மம், மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணங்களையும், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களையும் 'ம்' என்ற மகாரத்தால் ஒரெழுத்தில் கூட்டி சோதியை தியானம் செய்யுங்கள். அத்தீயாக ஈசன் தமக்குள்ளேயே பரம்பொருளாக அமைந்துள்ளதை உண்மையாய் உணர்ந்து சிவபதம் சேருங்கள். 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -287
அணுவினோடும் அண்டமாய் அளவிடாத சோதியை
குணமதாக உம்முளே குறித்திருக்கில் முத்தியாம்
முணுமுனென்று உம்முளே விரலை ஒன்றி மீளவும்
தினம் தினம் மயங்குவீர் செம்பு பூசை பண்ணியே.     

அணுவிற்கு ணுவாகவும் அண்டங்கள் அனைத்துமாகவும் எதனாலும் அளவிட முடியாத சோதியாகவும், இருப்பவன் ஈசன் அவனே! அவன் எண்குத்தானாக இருப்பதை உணர்ந்து நற்குணங்கள் அதையே எண்ணி தியானிப்பவர்க்கு முக்தி நிச்சயம் வாய்க்கும். அதுவன்றி பிறர்  அறிய தனக்குள்ளேயே மந்திரங்களை முனுமுனுத்து விரல்களில் மனம் ஒன்றி எண்ணியும், செம்பு சிலைகளை வைத்து பூசைகள் பண்ணியும் தினந்தோறும் உலகத்தவரை மயக்கி மயங்குவாரேயன்றி உண்மையை உணரமாட்டார்கள். 

****************************************************
சித்தர் சிவவாக்கியம் -288
மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம்
மூடமாக மூடுகின்ற மூடாமேது மூடரே
காலனான அஞ்சுபூதம் அஞ்சிலே ஒடுங்கினால்
ஆதியோடு கூடுமோ அனாதியோடு கூடுமோ?
  
மூலமாய் இருக்கும் பிரம்மமே தெய்வப் பிரசாதங்களைப் படைப்பதற்கு முன்பே முகர்ந்து விடுகிறதே! அப்பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி ஒருவரும் முகர்ந்து விடாமல் இறைவருக்கு படைப்பதாக திறந்து மூடி நேவேத்தியம் செய்யும் மூடர்களே! அதனை இறைவன் ஏற்றுக் கொண்டானா? மனிதர்கள் ஏற்றுக் கொண்டனரா? எமன் வந்து உயிரை எடுக்கும் பொழுது பஞ்ச பூதங்களும், பஞ்சாட்சரப் பொருளில் ஒடுங்கும்போது அவ்வுயிர் ஆதியோடு சேருமோ? அனாதியோடு சேருமோ?

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 289
முச்சதுர மூலமாகி முடிவுமாகி ஏகமாய்
அச்சதுரம் ஆகியே அடங்கியோர் எழுத்துமாய்
மெய்ச்சது மெய்யுளே விலங்கு ஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே. 
 .
நான்கு வேதங்களுக்கும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளுக்கும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் நான்கு நிலை களுக்கும் மூலமாகவும் முடிவாகவும் ஏகமாகவும் விளங்கும் ஈசன் நம் உடம்பிலேயே அச்சதுரமாய் நான்கான வீட்டிலுள் அடங்கி ஒரேழுத்தாக இருக்கின்றான். அந்த மெய்யான சதுர வீட்டை மெய்யாகிய உடலுக்குள் மெய்ப் பொருளாக விளங்கும் ஞான தீபமான சோதியை உணர்ந்து தியானியுங்கள். அப்போது நாம் உச்சரித்த பஞ்சாட்சர மந்திரம் உண்மையாக உள்ளதையும் உணர்ந்து அறிந்து கொள்ளுங்கள். அதுவே உன்னை சிவனடியைச் சேர்க்கும் சிவயநம என்ற உண்மை.
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 290
வண்டுலங்கள் போலும் நீர் மனத்துமாக அறுக்கலீர்
குண்டலங்கள் போலும் நீர் குளத்துலே முழுகுறீர்
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலன்
கண்டிருக்கும் உம்முளே கலந்திருப்பார் காணுமே.
  . 
தேன்வண்டானது வேறெந்த நினைவும் இன்றி நல்ல மனம் மிகுந்த பூக்களை மட்டுமே ரீங்காரமிட்டு தேடி தேனை எடுத்துச் சேர்ப்பதைப் போல் ஒரே நினைவோடு தியானம் செய்து மனத்தில் உள்ள குற்றங்களையும், பாவங்களையும் அன்பெனும் நீர் ஊற்றி அகற்றத் தெரியாமல் பாவம் போக்கவும் அழுக்கை அகற்றவும் மாடுகளைப் போல் குளத்தில் மூழ்குவதால் பலனுண்டா? ஈசனின் முடியைக் காண சபதம் செய்த பிரமன் பறந்து தேடியும் காண முடியாது திரும்பினான். பார்க்கும் இடத்திலேயே பார்ப்பானாக உனக்குள்ளே இருக்கும் பரம்பொருளைக் கண்டு அறிவையும், உணர்வையும் மனதையும் ஒன்றாக்கி தியானித்தால் ஈசன் உன்னோடு கலந்திருப்பதைக் கண்டு கொள்ளலாம்.           
 
***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!