Search This Blog

Dec 9, 2011

சிவவாக்கியம் (261-265) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (261-265)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -261
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம்
மெல்ல வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர்
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமும்
கள்ள வாசலைத் திறந்து காண வேணும் அப்பனே. 
 
 

உயிர் ஒடுங்கி நிற்குமிடம் உடம்பின் உள்ளே உள்ளதா அல்லது உடன்பின் வெளியே உள்ளதா என்பதை மெல்ல என் அருகில் வந்து சொல்லவேண்டும் என்கிறீர்கள். உள்ளே தீயாகவும் வெளியே நீராகவும் உள்ளது, ஒத்து ஒன்றாகி உடம்பாகியது. அவ்வுடம்பில் உயிரை அறிந்து ஒன்றிணைத்து ஒரே நினைவுடன் ஞானயோகத்தால் தியானிக்கும் பொது நாத ஒலி கேட்கும். அவ்வொலியை ஒளியாக விளங்கும் மெய்ப்பொருளில் இணக்க கள்ளவாசல் எனும் பத்தாம் வாசல் திறந்து காண, சோதியான ஈசன் உயிரில் ஒடுங்கி இருப்பதை அறியலாம். இதனை அறிந்து உணர்ந்து மெய்  பாடுபட்டு காண வேண்டும் அப்பனே.    
    
***************************************************
சித்தர் சிவவாக்கியம் -262
ஆரலைந்து பூதமாய் அளவிடாத யோனியும்
பாரமான தேவரும் பழுதிலாத பாசமும்
ஒரொணாத அண்டமும் உலோகலோக லோகமும்
சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே.
 

உயிரானது பல பிறவிகள் எடுத்து அலைந்து பஞ்சபூதங்களால் எண்ணற்ற யோனிகளில் பிறந்து இச்சுமையான உடம்பையும் பழுதிலாத மனதில் ஆசா பாசங்களையும் கொண்டு உழல்கின்றது. இவ்வுடம்பில் ஒட்டியுள்ள அண்டமாகவும் அனேகவித உலோகங்களையும் சேர வெந்து வேதியல் மாற்றத்தால் பஸ்பமாகச் செய்யும் மருந்தாகவும் சூட்சமாக உள்ள தேகம் எது என்பதை சொல்லுங்கள். நம் உடலுக்குள்ளேயே மணி மந்திர மருந்தாக உள்ள மெய்ப்பொருளை அறிந்து கொண்டு தியானம் செய்யுங்கள்.
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -263
என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்
என்னகத்துள் என்னை நான் அறிந்திலாத தாகையால்
என்னகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின்
என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே.
 

என் அகத்தில் நான் ஆக இருந்த என்னை நான் அறியாத காரணத்தால் என் மனதிலேயே நான் என்றாகி நின்ற ஈசனை எங்கெங்கோ சென்று நாடி ஓடித் தேடினேன். என் அகத்திலேயே நானாக இருக்கும் ஈசனையும் நான் முழுமையாக அறிந்து உணர்ந்து தெரிந்து கொண்டதற்கு பின் என்னுள்ளே நானாக நின்ற என் உயிரில் சிவமாகிய மெய்ப்பொருளே அனைத்துமாய் இருப்பதை அன்றி வேறு யாதுமொன்றும் இல்லை என்பதை தெளிவாக அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.

****************************************************
சித்தர் சிவவாக்கியம் - 264
விண்ணின்று மின்னெழுந்து மின்னொடுங்குமாறு போல்
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்
கண்ணின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
என்னுள் நின்ற என்னையும் யானறிந்து இல்லையே.
 .
விண்ணில் நின்றெழும் மின்னலானது அந்த மின்னலிலேயே ஒடுங்குகின்றவாறு போல எனக்குள் ஆகாயமான நினைவில் நின்று நினைக்கும் ஈசன் நானாக என் அகத்தில் இருக்கின்றான். கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் என் ஈசனை கண்ணைப் பற்றிய அறிவை அறியாத தன்மையினால் என்னுள் நின்று ஆட்டுவிக்கும் ஈசனை யான் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றேன். உன்னில் நின்ற நான் ஆகிய என்னை அறிந்து உணர்ந்து தியானியுங்கள். நான் என்பது என்ன என்பதை ஆராய்ந்தறிந்து கொள்ளுங்கள்.   
   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 265
அடக்கிலும் அடக்கொணாத அம்பலத்தின்
ஊடுபோய்
அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்
நடக்கிலும் இடைவிடாத நாத சங்கொலிக்குமே.

எவ்வளவு அடக்கினாலும் அடக்க முடியாத மூச்சுக் காற்றை வாசியினால் சிற்றம்பலமாகிய உள்ளத்தின் உள்ளே செலுத்தி அதிலேயே நிறுத்தி அடக்க, அடங்காத மனதை அன்பினால் உருக்கி அன்பே சிவம் ஆக இருக்கும் ஒன்றான மெய்ப் பொருளையே நின்றும் இருந்தும் கிடந்தும் நினைந்து தியானம் செய்யுங்கள். மனம் உதிக்கும் இடத்திலேயே மனமானது ஒடுங்கும். அறிவு பிரகாசிக்கும், அவ்வமயம் காமம், குரோதம், லோபம் ஆகிய கிலேசங்கள் நீங்கும். இந்த ஞான யோகத்தை தொடர்ந்து அப்பியாசம் செய்யும் சாதகர்களுக்கு தியானத்தில் அமர்ந்திருந்தாலும் நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உள்ளே வாசிலயமாகி இடைவிடாத நாதம் சங்கோசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.  

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!