Search This Blog

Dec 10, 2011

பதிற்றுப்பத்து : பதினெண் மேற்கணக்கு தொகை நூல்கள்

 
பதினெண் மேற்கணக்கு: எட்டுத்தொகை
1) ஐங்குறுநூறு, 2)அகநானூறு, 3)புறநானூறு, 4)கலித்தொகை, 5) குறுந்தொகை, 6)நற்றிணை, 7)பரிபாடல், 8)பதிற்றுப்பத்து.எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய வெண்பா பின்வருவது:
நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை
இவற்றுள், அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு. புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.  அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடல் வேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.
****************************************************************************

பதிற்றுப்பத்து:
பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
வஞ்சி மாநகரிலிருந்து ஆண்ட மன்னர்களில் 58 - ஆண்டுகள் ஆட்சி புரிந்த இமையவரம்பன் நெடுஞ்ச்செரலாதனைப் பற்றி  குமட்டூர்க் கண்ணனார் இரண்டாம் பத்திலும் , 25ஆண்டுகள் ஆட்சி புரிந்த இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கேழுகுட்டுவனைப் பற்றி பாலைக் கெளதமனார் என்னும் புலவர் மூன்றாம் பத்திலும், 25 - ஆண்டுகள் ஆட்சி புரிந்த இமையவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் மன்னனைப் பற்றி காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் நான்காம் பத்திலும்

55 - ஆண்டுகள் ஆட்சி புரிந்த இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்ற மன்னனைப் பற்றி பாணர் என்னும் புலவர் ஐந்தாம் பத்திலும், 38 - ஆண்டுகள் ஆட்சி புரிந்த இமையவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற மன்னனைப் பற்றி காக்கை பாடினியார் (நச்செள்ளையார்) ஆறாம் பத்திலும் மற்றும் கருவூர் நகரில் இருந்து ஆண்ட மன்னர்கள்: 25 - ஆண்டுகள் ஆண்ட செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் என்ற மன்னனைப் பற்றி கபிலர் என்ற புலவர் ஏழாம் பத்திலும்

17 - ஆண்டுகள் ஆண்ட தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனைப் பற்றி அரிசில்கிழார் என்ற புலவர் எட்டாம் பத்திலும் , 16 - ஆண்டுகள் ஆண்ட குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனைப் பற்றி பெருங்குன்றூர்க் கிழார் என்ற புலவர் ஒன்பதாம் பத்திலும் ஆகிய எட்டு மன்னர்களைப் பற்றிய வரலாற்றினை எடுத்துரைக்கின்றது.

இந்நூற்பாக்கள் புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியது ஆகும். சேர மன்னர்களின் கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம் ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை ஆகிய ஆட்சித் திறன்களையும் விளக்குகின்றன. இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார்

10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப் படுகிறது. 

கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன.  அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது. 


பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.

இரண்டாம் பத்தில் இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னனின் சிறப்புக்களை: இமையத்தில் வில் பொறித்தான், ஆரியரை வணக்கினான், யவனரை அரண்மனைத் தொழிலாளி யாக்கிக் கட்டுப்படுத்தினான், பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான் என்றும்; மூன்றாம் பத்தில் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற மன்னனின் சிறப்புக்களை: உம்பற் காட்டைக் கைப்பற்றினான், அகப்பா நகரின் கோட்டையை அழித்தான், முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான், அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்,நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான் என்றும்; 

நான்காம் பத்தில் களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரல் என்ற மன்னனின் சிறப்புக்களை: பூழி நாட்டை வென்றான்,நன்னனை வென்றான் என்றும்; ஐந்தாம் பத்தில் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்ற மன்னனின் சிறப்புக்களை: ஆரியரை வணக்கினான்,கண்ணகி கோட்டம் அமைத்தான்,கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான், வியலூரை அழித்து வெற்றி கண்டான்,கொடுகூரை எறிந்தான்,மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான், கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்,சோழர் ஒன்பதின்மரை வென்றான்,படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான் என்றும்;  

ஆறாம் பத்தில் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற மன்னனின் சிறப்புக்களை: தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான், பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான், வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான், மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான், கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான் என்றும் ;  

ஏழாம் பத்தில் - புகழூர் தமிழி (பிராமி) கல்வெட்டிலும் - செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மன்னனின் சிறப்புக்களை: பல போர்களில் வென்றான், வேள்வி செய்தான், மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான், அந்த மாய வண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான், பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான் என்றும்;  எட்டாம் பத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனின் சிறப்புக்களை: கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான், தகடூர்க் கோட்டையை அழித்தான் என்றும்;  

ஒன்பதாம் பத்தில் இளஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனின் சிறப்புக்களை: கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான், பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான், வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான், வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான், மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச் செய்தான், தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான், சதுக்கப் பூதத்  தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான், அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான் என்றும் மன்னர்களின் அருமை பெருமைகளை விளம்பிச் சென்றுள்ளனர்.

மேலும் பயணிப்போம் சங்க இலக்கியங்களின் பதினெண் மேற் கணக்கின் ஊடாக.. அன்புடன் கே எம் தர்மா..

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!