Search This Blog

Dec 27, 2011

சிவவாக்கியம் (326-330) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (326-330)
 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -326
ஆணியான ஐம்புலன்கள் அவையும்மொக்குள் ஒக்குமோ
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீ
ர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்ந்திரேல்
ஊண் உறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே.    
.    

பாவ புண்ணியங்களுக்கு காரணமான ஐம்புலன்களும், உலகில் அனைவர்க்கும் உங்களுக்கு இருப்பது போல ஒக்க அமைந்துள்ளது. எல்லோரும் அன்னையின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்த துன்பங்களும் இன்பங்களும் ஒன்றாகத்தான் அமைந்துள்ளது. உணவு, உறக்கம், போகம் என்ற அனுபவங்களும் உமக்கும் எமக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அதுபோல் யாவர்க்கும் பொதுவாக அமைந்திருக்கும் மெய்ப்பொருளை உணராமல் வீணர்கள்தான் வேறு வேறு என்று பிதற்றித் திரிவார்கள். மெய்ப்பொருளை உணர்ந்து ஐம்புலனை வென்று மீண்டும் யோனியில் பிறவா நிலைபெற யோக ஞான தியானம் செய்து ஈசனைச் சேர முயலுங்கள். 


***************************************************
சித்தர் சிவவாக்கியம் -327
ஒடுங்குகின்ற ஐம்புலன் ஒடுங்க அஞ்செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே.
   
 
தனக்குள் இயங்கி ஓடிக்கொண்டிருக்கும் ஐம்புலன்களையும் அஞ்செழுத்து மந்திரத்தினால் அடக்கி நான்மறையும் சொல்லுகின்ற வேதப் பொருளை நாடி தியானம் செய்பவர்கள் ஞானிகள். உங்களுக்குள் கூடுகின்ற கண்டித குணங்கள் ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற முக்குணங்கள் அகாரம், உகாரம், மகாரம் என்ற ஓம் எனும் ஓங்காரத்தினுள் ஆடிக் கொண்டிருக்கும் வாலை என்ற பாவையாக ஆன்மாவில் அமைந்திருப்பது சிவமே என்பதை அறிந்து அதையே தியானியுங்கள்.   
 
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -328
புவன சக்கரத்துளே பூத நாத வெளியிலே
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம் இயங்கும் வாசலில்
தண்டு மாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.

       
புவன சக்கரங்களாக விளங்கும் ஆதாரங்களுக்குள் பஞ்ச பூதங்களும் இயங்கும் நாத வெளியான உடம்பிலே மூலாக்னியான மூலாதாரத்தினுள் பொதிந்துள்ள வாயுவான தனஞ்செயனை சூரிய சந்திர கலைகள் இரண்டும் ஒன்றாக்கி சுழுமுனை வாசலில் இயக்கி முதுகுத்தண்டின் வழியாக எழுப்பி மேலேற்றி தனக்குள்ளே மனம் உலாவும் வெளியான ஆகாயத்தில் சேர்க்க வேண்டும், இதுவே வாசியோகம்.
 
***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 329
மவுன அஞ்செழுத்திலே வாசி ஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின்
அவனும் நானும் மெய் கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.
 
  . 
மவுனத்தில் இருந்து பஞ்சாட்சரத்தால் வாசியை மெள்ள ஏற்றி சுழுமுனையைக் கடந்து ஆகாய வெளிக்குள் நிறைந்திருந்த சோதி மண்டலத்தில் புகுந்து ஈசனை சேர வேண்டும். அங்கே அவனோடு நானும் மெய்ப்பொருளில் கலந்து அனுபவித்த மெய் ஆனந்த நிலையில் அவ்வீசனைத் தவிர நான் என்ற உயிரோ, உடம்போ, யாருமே இல்லை என்ற அறிவும், பிரபஞ்சம் முழுதுமே நிறைந்து நின்றது அவனே என்பதையும் உணருங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 330
வாளுரையில் வாளடக்கம் வாயுரையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆலடக்கம் அருமை என்ன வித்தை காண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும் நீயும் கண்டதே.   


வாளின் உறைக்குள்ளே வாள் அடங்கி இருப்பதைப் போல் வாய் எனும் கோபுர வாசலாகிய பத்தாம் வாசலில் உள்ள வாயுறையில் நாம் வாழ்நாள் முழுதும் விடும் மூச்சுக் காற்று அடங்கியுள்ளது. மானிட தேகத்திற்குள் நான் எனும் ஆன்மா அடங்கியிருக்கும் அருமை மிகவும் அதிசயமாக உள்ளதை காணுங்கள். நெற்பயிரின் தாளுக்குள்ளே மற்றொரு தாளும் ஒடுங்கி இருக்கின்ற தன்மையையும், ஒரு நாள் சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு நாள் அடங்கியிருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இதுதான் அன்றிலிருந்து இன்றும் என்றும் நீயும் நானும் கண்டு வருவது. அதலால் விந்தையாக அமைந்துள்ள ஆன்மாவை அறிந்து கொண்டு தியானம் செய்யுங்கள்.
   

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும்.  மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

No comments:

Post a Comment

பதிவினைப் பற்றி தங்களின் கருத்தை பதியலாமே நண்பரே!!