Search This Blog

Jan 29, 2012

பன்னிரெண்டாம் திருமுறை: பெரிய புராணம் (பகுதி-1)




பெரிய புராணம்:
முன்னுரை:
இப்பதிவு பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய சிறப்பிடத்தையும் தனித்தன்மையையும் விரிவாக விளக்குகிறது. இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும் சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது. பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை இப்பதிவில் காணலாம். தொகையடியார், தனியடியார் ஆகியோரின் அறிமுகமும் இப்பதிவில் கிடைக்கிறது. 



சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில் இடம் பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வதையும் சமூக நோக்குடைய காப்பியமாக விளங்குவதையும் இப்பதிவு சுட்டிக் காட்டுகிறது. சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார், திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப் பெண் தொண்டர்களையும் இப்பதிவு அறிமுகம் செய்கிறது.
 
சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் நிறைவாக அமைந்திருப்பது பெரியபுராணம். இதனைத் திருத்தொண்டர் புராணம் என்றும், திருத்தொண்டர் மாக்கதை என்றும் கூறுவர். இதன் ஆசிரியர் சேக்கிழார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு, பெரிய புராணம் ஒரு பெருங்காப்பியமாக அமைக்கப்பட்டுள்ளது. 



இரண்டு காண்டங்களையும் 13  சருக்கங்களையும், 4287 விருத்தப்பாக்களையும் இந்நூல் கொண்டுள்ளது. 63 தனியடியார்கள் வரலாறுகளும், 9 தொகையடியார்களது சிறப்புகளும் இந்நூலுள் விரித்துரைக்கப்படுகின்றன. சமய - சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் இந்நூல் ஆற்றியிருக்கும் பெரும்பங்கு கருதி ஒரு தனிப் பதிவாகப் பெரியபுராணச் செய்திகள் இங்கே விரித்துரைக்கப்படவுள்ளன.
 
அறிந்து கொள்ளக்கூடிய தகவல்கள்: 



பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்கு உரிய சிறப்பிடத்தையும், அதன் தனித்தன்மையையும் உள்ளவாறு இனம் காணலாம். தனித்தனி அடியவர்  வரலாறுகளை ஒரு பெருங்காப்பியமாக உருவாக்கியிருக்கும் நூலாசிரியர் சேக்கிழாரின் படைப் பாற்றலைச் சுட்டிக் காட்டலாம். உணர்வுக்கு மட்டுமே வரும் என்று கருதப்பட்டிருந்த பக்தி அனுபவத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து படிப்பவர்களுக்கு அவ்வனுபவத்தைக் கிடைக்கச் செய்யும் பெரியபுராணத்தின் பெருஞ்சிறப்பினை இனங்கண்டு போற்றலாம். இறைவனுக்கு நிகராக, அவன் அருள்பெற்ற அடியார்களையும் ஒளியூட்டும் போதே ஒரு சமயம் புதிய மறுமலர்ச்சி அடையும் என்ற உண்மையை அடையாளம் காணலாம்.
 

பெரியபுராணம் ஏறத்தாழ ஓர் ஐந்நூறு ஆண்டுக்கால வரலாற்றுக்கு ஒளியூட்டும் - வரலாற்றுக் கருவூலம் என அதன் சிறப்பினைப் பகுத்துக் காணலாம். தமிழர் வாழ்வியல், பண்பாடு, தனி மனிதப் பண்புகள், பிறர்க்குத் தொண்டு செய்து மகிழ்தல் முதலிய பண்பாட்டுப் பதிவுகளைத் தொகுத்துக் காணலாம். பெண்மை பெரியபுராணத்தில் பெற்றிருக்கும் சிறப்பிடத்தையும், சைவத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளையும் அடையாளங்கண்டு பட்டியலிடலாம். தமிழ்ச் சைவ வரலாற்றில் பெரியபுராணம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை இனங் காணலாம்.

4.1. நூலாசிரியர் - சேக்கிழார் :

பெரிய புராண நூலாசிரியர் சேக்கிழார். தொண்டை நாட்டில் குன்றத்தூரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தில் ‘சேக்கிழார்’என்ற குடியில் வந்தவர். இயற் பெயர் அருண்மொழித் தேவர். இவர் அநபாயன், அபயன், திருநீற்றுச் சோழன் முதலிய பட்டப் பெயர்களை உடைய இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதல் அமைச்சராகத் திகழ்ந்தவர். சோழன் இவருக்கு ‘உத்தம சோழப்பல்லவன்’ என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தான். அக்காலத்தில் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற சமண நூலில் சோழன் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். மன்னனைச் சைவ நாட்டம் உடையவனாக மாற்றச் சிவன் அடியார் வரலாறுகளைச் சேக்கிழார் பெரிய புராணமாக இயற்றினார். 

4.1.1 தொண்டர் சீர்பரவுவார்: 

 
சேக்கிழார் சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்றுத் தில்லைக்குச் சென்று நடராசப் பெருமானை வணங்கி நின்றார். தில்லை அம்பலவன் ‘உலகெலாம்’ என்று சேக்கிழாருக்கு அடி எடுத்துக் கொடுத்தான். அதனையே முதலாகக் கொண்டு,

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்



என்ற வாழ்த்தை முதலாக அமைத்துக் கொண்டு ‘திருத்தொண்டர்  புராணத்’தை இயற்றி, சோழன் முன்னிலையில் இந்நூல் தில்லையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நிறைவில் சோழன் சேக்கிழாரையும், பெரிய புராணத்தையும் யானை மீது ஏற்றி, தானும் பின் இருந்து கவரி வீசி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பெருமை சேர்த்தான்.  ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தான். பின்னர் சேக்கிழார் தில்லையிலேயே தவம் செய்து வந்தார். இவர் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பர்.

4.1.2 சேக்கிழார் புராணம்:


சேக்கிழார் வரலாற்றையும், பெரியபுராணத் தோற்றத்தையும் விரித்துரைக்கும் செய்யுள் நூல் ஒன்று தமிழில் உள்ளது. இந்நூலுக்குச் ‘சேக்கிழார் புராணம்’ என்று பெயர். இதனை, ‘திருத்தொண்டர் புராண வரலாறு’என்றும் கூறுவர். இதனைத் தில்லை உமாபதி சிவாசாரியர் என்பவர் இயற்றியதாகக் கூறுவர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமது சேக்கிழார்ப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,
பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்பாடிய கவி வலவ...    என்று சேக்கிழாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
 
4.2 பெரியபுராணம்:


பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாகப் பெரியபுராணம் இயற்றப் பட்டுள்ளது. பெரியபுராணத்தின் முதல் நூல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை என்பது முன்னரும் கூறப்பட்டது. எனவே, சிவனடியார் வரலாறுகளைத் தொகுத்துத் தந்த சுந்தமூர்த்தி சுவாமிகளையே காப்பியத் தலைவராகச் சேக்கிழார் கொண்டுள்ளார். 

காப்பியத்தின் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடத்தும் சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாற்றை விரித்துரைத்து, இடையிடையே அவரால் போற்றி வணங்கப்பட்ட அடியவர்கள் வரலாறுகளையும் விளக்கி உரைத்து, மிக நுட்பமாக இப்பெருங்காப்பியத்தைச் சேக்கிழார் படைத்தளித்துள்ளார். காப்பியக் கதை கயிலாயத்தில் தொடங்கி மீண்டும் கயிலாயத்தில் கொண்டு போய் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இவ் அமைப்பு சேக்கிழாரின் காப்பியப் புனைவிற்குச் சான்று கூறி நிற்கிறது.

4.2.1 காப்பியப் பகுப்பு :


பெரியபுராணம் காப்பிய இலக்கணங்களுக்கு ஏற்ப முதற்காண்டம், இரண்டாம் காண்டம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. நூலின் உட்பிரிவைச் சேக்கிழார் ‘சருக்கம்’என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். முதல் காண்டத்தில் 5 சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் 8 சருக்கங்களும் இடம் பெற்றுள்ளன. திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றுள்ள 11 பாடல்களின் தொடக்கமே சருக்கங்களுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளன. 

உதாரணமாகத் திருத்தொண்டத் தொகையின் முதற்பாடல் ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தொடங்கியுள்ளதால், அப்பாடலில் இடம் பெற்றுள்ள அடியார் வரலாறுகளை விரித்துரைக்கும் பகுதிக்குத் ‘தில்லை வாழ் அந்தணர் சருக்கம்’என்றே ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். முதல் சருக்கமாகக் கயிலாய மலைச் சிறப்புரைக்கும் ‘திருமலைச் சருக்கத்'தையும் இறுதியாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலாயம் சென்றடைந்த செய்திகளைக் கூறும் ‘வெள்ளானைச் சருக்க’த்தையும் அமைத்துக் கொண்டார்.

நூல் அமைப்பு:-



4.2.2 யாப்பமைதி:

சேக்கிழாரின் பெரியபுராணம் முழுவதும் அக்காலத்தில் பெருவழக்கில் இருந்த யாப்பு முறைகளையே பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. கீழ் வரும் பட்டியல் யாப்பமைதியைக் எடுத்துரைக்கும். 

யாப்பு வகை:
1 .  அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்..  1805  பாடல்கள்.
2 .  எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்...      75  பாடல்கள்.
3 .  எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்...  280  பாடல்கள். 
4 .  தரவு /கொச்சகக் கலிப்பா                                    ... 1207  பாடல்கள்.  
5 .  கலி நிலைத் துறை                                                   ...   545  பாடல்கள்
6 .  கலி விருத்தம்                                                               ...   368  பாடல்கள். 
7வஞ்சி விருத்தம்                                                          ...        6  பாடல்கள். 
மொத்தம் .....பாடல்கள் .................................................... 4286  பாடல்கள்.  
=================================================================
முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்க உரையுடன் மேலும் பயணிப்போம் பன்னிரு திருமுறைகளின் ஊடாக !!! அன்புடன் கே எம் தர்மா...

Jan 28, 2012

தேவார திருவாசகங்கள் (பகுதி-3): பன்னிரு திருமுறைகள்.



தேவார திருவாசகங்கள் (பகுதி-3): பன்னிரு திருமுறைகள்.
3.4 சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
திருமுறை ஆசிரியர்களுள் மூன்றாமவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் அருளிய பனுவல்கள் ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப் பட்டுள்ளன. இவர் திருமுனைப் பாடி நாட்டில், ஆதி சைவர் குலத்தில் சடையனார் - இசை ஞானியார் அருமகவாக அவதரித்தார். இவர் பிள்ளைத் திருநாமம் ஆரூரர் என்பது. திருமண நாளில் சிவபெருமான் புத்தூரில் தடுத்து ஆட்கொண்டான். இறைவன் விரும்பியவாறு திருவெண்ணெய் நல்லூரில் ‘பித்தா பிறை சூடி’என்று சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்க, இவர் பதிகப்பாமாலைகள் பாடத் தொடங்கினார்.
திருவதிகையில் திருவடி தீட்சை பெற்றார். திருவாரூரில் இறைவன் தம்மை இவருக்குத் தோழனாகத் தந்தான். திருவாரூரில் பரவையாரையும் திருவொற்றியூரில் சங்கிலியாரையும் மணந்தார். சிவபெருமான் இவருக்காக வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்று உணவு படைத்தார். பரவையின் ஊடல் தீர்க்கத் தூது சென்றார். சேரமான் பெருமாள் நாயனாரும், கோட்புலியாரும் இவர் காலத்தவர். 


முதலை வாய்ப் பாலனை இவர் பதிகம் பாடி மீட்டார். வன்தொண்டன் என்பதும் இவர் பெயர்களுள் ஒன்று. திருத்தொண்டத் தொகை இவரால் அருளப்பட்டது. ஆடிச் சுவாதி நாளில் இவர் வெள்ளானை மீது ஏறிக் கயிலை சேர்ந்தார். சகமார்க்கம் என்றும் யோகநெறி என்றும் கூறப்படும் தோழமை நெறியில் வாழ்ந்தவர் இவர். இவர் உலகில் வாழ்ந்திருந்த காலம் 18 ஆண்டுகள் என்பர். இவர் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கூறப்படுகிறது.
3.4.1 திருத்தொண்டத் தொகை: 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையுள் 100 பதிகங்களும் 1026 அருட்பாடல்களும் இடம் பெற்றுள்ளன. 96 திருத்தலங்கள் இவர் பாடல் பெற்றுச் சிறந்துள்ளன. இவர் 17 பண்களில் பாடியுள்ளார். இவர் அவதரித்த நோக்கமே திருத்தொண்டத்தொகை என்ற அடியார் வரலாறு கூறும் பதிகம் பாடுவதற்கென்று சேக்கிழார் குறிக்கிறார்.
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்

தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்போதுவான்..(பெரியபுராணம்-35)

சுந்தரர் வருகை அமைந்தது என்பது சேக்கிழார் எண்ணம் திருத்தொண்டத் தொகையின் சிறப்பினைப் பெரிய புராணம் பலவாறு விரித்துரைக்கிறது. சான்றாக

ஈசன் அடியார் பெருமையினை

எல்லா உயிரும் தொழ எடுத்துத்
தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகை.....(பெரியபுராணம்-1270)

இதில் 60 தனியடியார்களும் 9 தொகையடியார்களும் குறிக்கப்பட்டுள்ளனர். பெரிய புராணத் தோற்றத்திற்கு இதுவே முதல் நூலாக அமைந்தது. இதில் ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று தொடங்கி 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

3.4.2 பக்திக் கனிவு:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏழாம் திருமுறைப் பாடல்கள் இலக்கிய எழிலும், கற்பனை வளமும், பக்திக் கனிவும் மிக்கன. இறைவன் ஒருவனே போற்றிப் புகழத் தக்கவன் என்பதனை,  

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்…(7564) .. (இச்சை = விருப்ப மொழிகள்)


குற்றம் செய்யினும் மன்னித்துச் சிவ பெருமான் அருள்செய்வான் எனத் தாம் கொண்ட நம்பிக்கையை,
குற்றஞ் செய்யினும் குணம் எனக் கருதும்

கொள்கை கண்டு நின் குரைகழல்அடைந்தேன்
பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே ….(7786) ....என்ற அடிகளில் சுந்தரர் பதிவு செய்கிறார்.


3.4.3 அரிய தொடர்கள் சைவப் பெருமக்கள் போற்றித் துதிக்கும் பல அரிய பாடல்களும், தொடர்களும் ஏழாந்திருமுறையுள் இடம் பெற்றுள்ளன. ஒன்றிரண்டு கீழே தரப்பட்டுள்ளன.

நற்றவா உனை நான்மறக்கினும்

சொல்லும் நா நமச்சி வாயவே…(7712)

வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால்

மற்று நான் அறியேன் மறு மாற்றம்…(7774)

அன்னம் வைகும் வயற் பழனத்து அணி

ஆரூ ரானை மறக்கலும் ஆமே…..(7827)

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்

விரும்பி ஆட்பட்டேன்….(8189)

மண்ணுலகில் பிறந்து உம்மை

வாழ்த்தும் வழியடியார்…(8245)

 
=================================================

3.5 மாணிக்கவாசகர்: 
பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம். இவரே இயற்றியதாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலக் கோவையாரும் எட்டாம் திருமுறையாகக் கொள்ளப்பட்டு வருகிறது. மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். 

இயற்பெயர் திருவாதவூரர். பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக விளங்கினார். மன்னன் அளித்த பொருளை இவர் குதிரை வாங்கப் பயன்கொள்ளாது திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். சிவபெருமான் குருவடிவம் காட்டி இவரைக் குருந்த மர நிழலில் ஆட்கொண்டான்.

அக்காலை இவர் பாடிய பனுவல்களே திருவாசகம். இறைவன் இவருக்கு மாணிக்கவாசகர் என்னும் திருநாமம் சூட்டினார். நரி பரியானது, வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது, இறைவன் பிரம்படிபட்டது, பௌத்தர்களோடு வாதிட்டது, தில்லைப் பொன்னம் பலத்தில் இறைவன் தாள் மலர்களில் கலந்தது என்பன இவரது வாழ்வியல் அற்புதங்களாகும். ஆனி மக நாளில் இவர் இறையடிகளில் கலந்தார். இவ்வுலகில் இவர் வாழ்ந்த காலம் 32 ஆண்டுகள். இவர் காலம் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குப் பிற்பட்டது என்பதே ஆய்வாளர் முடிவு. இவர் தேவார மூவருக்கு முற்பட்டவர் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

3.5.1 திருவாசகம்:
திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முதற்கண் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் அமைந்துள்ளன. அடுத்து வரும் திருச்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.
மேலை நாட்டுக் கிறித்துவர்களும் இதன் சிறப்பில் நெஞ்சைப் பறி கொடுத்துள்ளனர். இதனை ஒரு அனுபவ நூல் என்பர். திருவாசகச் சிறப்பினைப் பின்வந்த சிவப்பிரகாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க வள்ளலார் முதலியோர் பெரிதும் போற்றிச் சிறப்பித்துள்ளனர். திருவாசகம் ஒரு சிறந்த பாராயண நூலாகத் திகழ்ந்து வருகிறது.

3.5.2 அனுபவ வெளிப்பாடுகள்:

திருவாசகத்தில் பக்தி அனுபவ வெளிப்பாட்டில் வந்த பல அரிய தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க(சிவ புராணம்-1)
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….(சிவ புராணம்- 18)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்.(சிவ புராணம்- 26-31)
(விருகம் = மிருகம் என்பது விருகம் என மருவிற்று, பல்விருகம் = பல மிருகம், தாவரம் = நிலைப்படு பொருள், சங்கமம் = இயங்கும் பொருள்) இவையும், இவை போல்வனவுமாகிய அரிய தொடர்கள் பலவற்றைத் திருவாசகத்தில் காணலாம். திருவாசகத்தில் ஞான அனுபவ வெளிப் பாடாக அமைந்த உள்ளுருக்கும் அருட்பாடல்கள் பல உள்ளன. ஒன்றிரண்டைக் காணலாம்.

யானே பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உறுமாறே... (திருச்சதகம் - 90) 

(உறுமாறே = பெறும் வழி) என்ற பாடலில் தன்னிலை இரக்கம் நிறைந்துள்ளது. ‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்’ என்ற பாடலில் படைத்தல் முதலிய இறைவனின் ஐந்தொழில்களும் ஒரு சேரப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மா£ணிக்கவாசகரின் பக்தி வைராக்கியத்தை
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே .. (பிடித்த பத்து:538) .....என்ற அரிய பாடல் அளவிட்டுக் காட்டுகிறது.

3.6. திருச்சிற்றம்பலக் கோவையார்: 


எட்டாந் திருமுறையுள் இடம் பெற்றுள்ள திருச்சிற்றம்பலக் கோவையார் 400 கட்டளைக்கலித்துறைப் பாக்களால் நடையிடுகிறது. அகப்பொருள் துறைகள் பலவற்றையும் அவை நிகழும் முறையில் நிரல்படக் கோத்துச் செய்யப்படும் அகப் பொருள் நூல் வகையைச் சார்ந்தது கோவை என்பது. திருச்சிற்றம்பலக் கோவையாரே இவ்வகையில் முதல் நூல் என்பர். 

தில்லைக் கூத்தப் பெருமானைப் பாடல் தோறும் இணைத்துப் பாடும் வகையில் புகழ்ந்துரைக்கும் போக்கில் இந்நூல் நடையிடுகிறது. தில்லைச் சிற்றம்பல வனின் அருளிப்பாடுகள் பலவும் மிக்க நயத்துடன் இந்நூலுள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சான்றாக.:
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
(போற்றித் திருவகவல்  164-65)


உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச்
சிற்றம்பலத்து ஒருத்தன்….(திருக்.9)


பொருளாய் எனைப் புகுந்து ஆண்டு 
புரந்தரன் மால் அயன் பால்
இருளாய் இருக்கும் ஒளி(திருக்-73 )..  
புரந்தரன் = இந்திரன்)

3.7 தொகுப்புரை:

தேவாரத் திருவாசகங்கள் என்ற இப்பதிவில் தேவாரம் மற்றும் திருவாசகங்களின் தொகுப்பு முறை, பதிக எண்ணிக்கை, பாடல் தொகை, பாடப் பெற்ற தலங்கள், அமைந்துள்ள பண் அடைவுகள், தேவாரம் பாடிய மூவரின் வரலாற்றுச் சுருக்கம், அவர் தம் பெருமைகள், பாடல் சிறப்பு, வாழ்ந்த காலம் முதலியன முறையாக விளக்கம் செய்யப் பெற்றுள்ளன. அரிய தேவாரத் திருவாசகத் தொடர்களும், பெரிதும் போற்றப்படும் அருள் பாடல்களில் சிலவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. 



இப்பதிவில் அறிந்து கொள்ளத்தக்கவை:
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வழங்கப்பெற்ற பெயர்களில் இரண்டினைக்குறிப்பிடுக...1. வன் தொண்டர் 2. நம்பியாரூரர்
திருத்தொண்டத் தொகையுள் இடம் பெற்றுள்ள தனியடியார், தொகையடியார் எத்தனை பேர்?.. 1. தனியடியார் - 60  2. தொகையடியார் - 9
சுந்தரர் தேவாரத்தில் நாம் காணும் அரிய சொல்லாட்சிகளில் இரண்டினைக் குறிப்பிடுக...
  1. ‘நற்றவா உனை நான்மறக்கினும் சொல்லும் நா நமச்சி வாயவே’
  2. ‘வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்’
எட்டாம் திருமுறையுள் இடம் பெற்றுள்ள இரண்டு நூல்களின் பெயர்களை எடுத்து எழுதுக....1. திருவாசகம்: 2. திருச்சிற்றம்பலக் கோவையார்
திருச்சிற்றம்பலக் கோவையார் நூலின் யாப்பு, பாடல் தொகைகளைக் குறிப்பிடுக...யாப்பு - கட்டளைக் கலித்துறை பாடல் தொகை : 400
இம்மையே உன்னைச்சிக்கெனப் பிடித்தேன். எங்கு எழுந்தருளுவது இனியே - என்று பாடியது யார்?..இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே - இதைப் பாடியது மாணிக்கவாசகர்.
=================================================================
முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்க உரையுடன் மேலும் பயணிப்போம் பன்னிரு திருமுறைகளின் ஊடாக !!! அன்புடன் கே எம் தர்மா...

Jan 26, 2012

சிவவாக்கியம் (546-550) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்

சிவவாக்கியம் (546-550)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -546

கல்லு வெள்ளி செம்பிரும்பு கைச்சிடும் தராக்களில்
வல்ல தேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடின்
தொல்லையற்றிடப் பெருஞ் சுகம் தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை.

            
கல்லிலும், வெள்ளி, செம்பு, இரும்பு என்று காய்ச்சிடும் தராக்களிலும் வல்லமையுள்ள தெய்வ உருவங்களை பலவித பேதங்களில் அமைத்து அங்கு போற்றி வழிப்பட்டாலும் தொல்லையற்று இருக்க முடியமா? அது உண்மையில் பெருஞ்சுகமாகிய இறை இன்பத்தை தருமோ சொல்லுங்கள். உங்களில் உள்ள சோதியில்தான் மெய்யின்பம் பெற முடியுமேயன்றி வேறு வகைகளில் போற்றுவதனால் இல்லையென்று ஈசன் மீது ஆணையிட்டு சொல்கின்றேன். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -547
இச்சகஞ் சனித்ததுவும் ஈசனைந் தெழுத்திலே
மெச்சவுஞ் சராசரங்கள் மேவுமைந்தேழுத்திலே
உச்சிதப் பல உயிர்கள் ஒங்கலஞ் செழுத்திலே
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்குமைந்தெழுத்திலே.

இந்த உலகம் தோன்றியது ஈசனுடைய நமசிவய என்ற அஞ்செழுத்தாலே, அனைத்து மேலான சராசரங்கள் யாவிலும் மேவியிருப்பது ஐந்தெழுத்தே. சத்தியமான மெய்ஞ்ஞானப் போதப்பொருளாக நிற்பதும் ஐந்தெழுத்தே. ஆனதால் ஐந்தெழுத்தை ஓதி ஐந்தெழுத்தின் உண்மைகளையும் பஞ்சபூத தன்மைகளையும் உணர்ந்து, ஐந்தெழுத்தே பஞ்சாட்சரமாகிய மெய்ப் பொருளாக இருப்பதை இருந்து அதையே நோக்கி தியானித்து ஈசன் அருள் பெறுங்கள்.  
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -548
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்துத் தாங்குருடாவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதி செய் மூடர்காள்
பாத்திர மறிந்து மோன பத்தி செய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தராவர் அங்
னே.

      .                         
சாத்திரங்களைப் பார்த்துப் பார்த்து அதன்படியே நடந்து வந்தும் மெய்யறிவை அறியாமல் தாங்கள் குருடாகி இருளிலேயே இருக்கின்றீர்கள். கண்கள் கெட்டுப் போகும்படி உச்சி வெயிலில் சூரியனை நேராகப் பார்த்து மந்திரங்களை ஓதி துதி செய்யும் முட்டாள்களே! பக்குவப்பட்டு பாத்திரமாக இருக்கும் உயிரை அறிந்து, அதுவே மோனம் என்ற மெய்ப் பொருள் என்பதை உணர்ந்து, அதையே ஈசன் திருவடி எனப் பற்றி பக்தியுடன் தியானம் செய்ய வல்லவர் ஆனால், சாஸ்திரங்களின் சூத்திரப்படி, அதைத் தெரிந்தவர்கள் யாவரும் சுத்த ஞானியாக ஞானியாக ஆவார்கள். .      
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 549
மன உறுதி தான் இலாத மட்டிப் பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினமும் ஊரெங்குஞ் சுற்றித் திண்டிக்கே அலைபவர்
இளமதிற் பலர்கள் வையும் இன்பற்ற பாவிகாள்.

தன்னிடம் மனதில் திட நம்பிக்கையுடன் இறைவனை எண்ணி தியானம் செய்ய வேண்டும். மனதில் உறுதியில்லாத மடமந்தை கொண்ட மாடுக்களைப் போன்று வாழ்ந்து கொண்டு பிணமாகப் போகும் மனிதர்களே! கோபம் அடைவார்கள். பிறர் பொருளை ஏமாற்றி சேகரித்து வைத்து யாருக்கும் சொல்லாமல் எதற்கும் பயனின்றி இறந்து போவார்கள். தினந்தோறும் ஊரெல்லாம் சுற்றி சோற்றுக்கு அலைபவர்கள் மெய்யின்பத்தை அறியா பாவிகள். இவர்களை வருங்காலம் தூற்றும் ஆதலால் இளமையிலேயே உண்மையை உணர்ந்து மனத்தில் உறுதியுடன் செத்தாலும் வைத்த அடி மாறாத திடநம்பிக்கையுடன் ஈசனைத் தியானித்திடுங்கள்.

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 550
சிவாய வசியென்னவுஞ் செபிக்க இச்சகமெலாம்
சிவாய வசியென்னவுஞ் செபிக்க யாவும் சித்தியாம்
சிவாய வசியென்னவுஞ் செபிக்க வானமாளலாம்
சிவாய வசியென்பதே இருதலைத் தீயாகுமே. 


சிவாய வசி என்று ஓதி செபிக்க இந்த சகம் எல்லாம் நம் வசம் ஆகுமே. சிவாயவசி என்று எண்ணி மனதிலேயே செபித்து தியானிக்க யாவும் சித்தியாகுமே. சிவாய வசி என வாசியேற்றி செபிக்க ஆகாயதலத்தில் ஆண்டவனைச் சேர்ந்து தேவர்களாகி வானம் ஆளலாம். சிவாய வசி என்பது இருதலைத் தீயாகி அதுவே சோதியான ஈசன் ஆகும்.
   
***************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன், கண்டு படித்து இன்புற்ற அன்பு நண்பர்களே!!! இத்துடன் சிவவாக்கியரின் பாடல் பதிவு முற்றுப் பெற்றது. இப்பாடல் பதிவுகளை (கிரமமாக- இணைப்புக்களுடன் தொகுத்து இறுதிப் பதிவு நாளை வெளியிடப்படும்) வேண்டும் அன்பர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளவும். http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

சிவவாக்கியம் (541-545) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (541-545)

 சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -541

நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று
ஊரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர்
சீரினிற் உனக்கு ஞான சித்தி செய்வேன் பாரென
நேரினிற் பிறர் பொருளை நீளவுங் கைப்பற்றுவர்.        
           

நீர்மேல் நிற்கும் குமிழியைப் போன்றது நிலையில்லாத உடம்பு இது என்று ஞானம் பேசி, தாங்களே அவதாரமாக வந்த உ
ண்மையான குருவென்று ஊர் முழுவது பறையடித்து பிரச்சாரம் செய்து உண்மைப்பொருள் அறியாத உதாரியாய் திரியும் போலிக் குருவானவர் ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என அழைப்பு விடுத்து ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி அதற்கு நிகராக பிறர் பொருளை கட்டணம் என்று கட்டாயமாக வசூல் செய்து வாழ்நாள் முழுதும் நெடுக கைப்பற்றுவார்கள். இவர்களை கண்டு ஏமாறாதீர்கள். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -542
காவியுஞ் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்திராட்சம் யோகத்தண்டு கொண்ட மாடுகள்
தேவியை அலைய விட்டுத் தேசமெங்குஞ் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டலைவரே.

காவி ஆடை, சடாமுடி, கமண்டலம், மான் தோல் ஆசனம், கழுத்திலும் உடம்பிலும் உருத்திராட்சம் யோகத்தண்டு இவைகளைக் கொண்டு சாமியார் வேடம் போட்ட சோம்பேறி மாடுகளான மனிதர்கள், தங்கள் மனைவியை தவிக்கும்படி அலையவிட்டு விட்டு தேசமெங்கும் சுற்றி பிச்சை எடுப்பார்கள். அதனால் பாவியாகி சோற்றுக்காக வீடெல்லாம் சென்று அம்மா தாயே பசி என்று கேட்டு அலைவார்கள். 
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -543
முத்தி சேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லி அங்கும் சாமி வேடம் பூண்டவர்
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம் பறித்துப் பாழ் நரகில் வீழ்வரே. 
                       
ஜீவன் முக்தி அடைவதற்குள்ள சித்தியை இங்கு முன்னதாக உடனே நான் தருவேன் பாருங்கள் என்று சத்தியங்கள் சொல்லி சாமி வேடம் பூண்டவர், நித்தியம் தன் வயிறு வளர்க்க பல நீதிக் கதைகளையும் சொல்லி ஞானப் பொருளறியாமல் ஞானம் பேசிப் பேசியே குருபக்தியை எடுத்துரைத்து பணத்தை பறிப்பார்கள். யோக ஞானத்தை விலை வைத்து விற்பதால் இவர்கள் பாழும் நரகத்தில் விழுவார்கள்.     
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 544
செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில் பாதகுறடு செய்தழிக்
கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே.

செம்மை மிகுந்த பழமையான மரத்தில் சிலைகளையும் தலைகளையும் செய்து வணங்குகின்றீர்கள். கொம்பில்லாத அம்மரக்கிளையில் பாதக் குறடுகள் செய்து காலில் போட்டு அழிக்கிறீர்கள். கையெடுத்து வணங்கியதும் காலில் போட்டு மிதித்ததும் ஒரே மரத்தில் ஆனது தானே. உங்களுக்குள்ளே சோதியாக விளங்கும் ஈசனை அறிந்து அவனையே நாடியிருந்து நோக்கி தியானிக்க வல்லவரானால் இம்மலமான உடம்பில் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் எக்குற்றங்களும் இல்லாது மனத்தூய்மை பெறுவீர்கள். மாசற்ற மனதில் ஈசன் வாழ்வான்.   

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 545
எத்திசை எங்கெங்குமோடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலை முழுகச் சுத்த ஞானி யாவரோ
பக்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
முத்தியின்றிப் பாழ் நரகில் மூழ்கி நொந்தலைவரே.  

எல்லாத் திசைகளுக்கும் சென்று எங்கெங்கும் ஓடி சுற்றி வந்தாலும் எண்ணற்ற புண்ணிய நதிகளில் தலை முழுகுவதாலும் சுத்த ஞானியாக ஆக முடியுமோ! மெய்பக்தியோடு மெய்ப்பொருளை அறிந்து அரன்பதம் பணிந்திடாத பாவிகளே! மெய்ப்பொருளை அறிந்து தவம் செய்து உணர்ந்தால் தான் சுத்த ஞானி ஆக முடியும். இதைவிடுத்து அலைவதால் முக்தி கிடைக்காது. பாழும் நரகத்தில்தான் மூழ்கி நொந்து போவீர்கள். ஆதலால் மெய்ப்பொருளை அறிந்து தியானியுங்கள்.              

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
 

சிவவாக்கியம் (536-540) - சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்


சிவவாக்கியம் (536-540)

 சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே !!!
சித்தர் சிவவாக்கியம் -536

ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம் செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேம நிட்டை பூரிக்கச் செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பதுண்மையே.      
           

பூசைகளைப்போட்டு நேம நிட்டைகளோடு மற்றவர் பார்த்து வியப்படைய பூரித்து நடிக்கும் பாதகர்கள் ஆசை கொண்டு அனுதினமும் அன்னியர் பொருள்களை அபகரித்து மோசம் செய்வதற்கே முற்றிலும் அலைகின்றனர். அவர்களுக்கு இவ்வுலகில் ஏமாற்றுவதால் பொருளோடு வாழ்ந்திருந்தாலும், அதனால் இக்காசியினில் ஏழு பிறப்பும் நரகம் காத்திருப்பது உண்மையாகும். 
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் -537
நேசமுற்று பூசை சித்து நீறு பூசிச் சந்தானம்
வாசமோடு அணிந்து நெற்றி மைதிலர்தம் இட்டுமே
மோசம் பொய் புனை சுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி கலம்புரண்ட வெண்ணீராகும் மேனியே.

ஈசன் மீது மிகவும் அன்புற்று இருப்பது போல் நடித்துக் கொண்டு அன்றாடம் பூசைகள் செய்து உடல் நிறைய விபூதியை தரித்து வாசமுடைய சந்தனத்தை உடம்பு முழுதும் அணிந்து கொண்டு நெற்றியில் அஞ்சன மையினால் கறுப்புத் திலகமிட்டு மற்றவர் மதிக்க பெரிய பக்தராக வேடமிட்டு மோசம் பொய் புனைசுருட்டு போன்ற அத்தனை திருட்டுத் தனங்களையும் செய்து வாழ்ந்து வரும் மூடர்களே! அதனால் வரும் வினை என்ன தெரியுமா?  போர்க்களத்தில் வெட்டுப்பட்டு ரண வேதனையால் புரளும் குதிரையைப் போல் உங்கள் உடம்பில் ரண வேதனைகள் உண்டாகி கொதிக்கும் வெந்நீரைப் போல் மேனி கொதித்து துன்பத்தில் உழல்வீர் எச்சரிக்கை.
 
      
****************************************************
சித்தர் சிவவாக்கியம் -538
வாதஞ்செய்வேன் வெள்ளியும் பொன் மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிக்கப் பொன் பணங்கள் தாவேனச்
சாதனை செயதெத்திச் சொத்துத் தந்ததைக் கவர்ந்துமே
காத தூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே.  
                       
நான் இரும்பைச் தங்கமாக்கும் வாதவித்தை செய்வேன் வெள்ளியும் பொன்னும் பத்தரை மாற்று தங்கமும் செய்ய சாகாத வேகாத போகாத குருமருந்து செய்ய வேண்டும். அந்த குரு செய்து முடிக்க ஒரு மண்டல காலம் ஆகும். அதற்கு வேண்டிய பொன்னும் பணமும் தாருங்கள். உங்களை இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரனாக மாற்றுவேன் என ஆசை காட்டி எத்தாகப் பேசி ஏமாற்றி வாக்கிய சொத்துக்களை கவர்ந்து கொண்டு வெகுதூரம் ஓடிவிடுவார்கள். அவர்களைத் திரும்பவும் காண்பதென்பது அருமையே. ஆதலால் இம்மாதிரியான போலி சித்தர்களை நம்பி ஆசையில் அகப்பட்டு ஏமாறாதீர்.      
 

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 539
யோக சாடை காட்டுவார் உயரவும் மெழும்புவார்
வேகமாக அட்ட சி
த்து வித்தை கற்று நெட்டுவார்
மோகங் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப் பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே. 

மற்றவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என்று யோக சாடைகளை செய்து காட்டுவார்கள். தரையிலிருந்து உயரவும் எழுவார். வெகு வேகமாக சித்து விளையாட்டுக்களை கற்று அதனைச் செய்து வித்தைக் காட்டி வியப்படையச் செய்வார். இதனால் மாயையில் அகப்பட்டு காம ஆசையினால் மோகங் கொண்டு பெண்களில் சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்வார். அதன் பின் உண்மையான யோக ஞானத்தை இழந்து பெண்ணாசையால் பேய் பிடித்தவர் போல அலைந்து இப்பேருலகில் சாவார்கள். ஆகையால் சித்து வித்தைகளை விட்டு அவைகளில் நாட்டமில்லாது மெய்ஞானத்தில் நில்லுங்கள்.         

***************************************************
சித்தர் சிவவாக்கியம் - 540
காய காய முன்பதாகக் கண்டவர் மதித்திட
மாய வித்தை செய்வதெங்கு மடிப்பு மோசஞ் செய்பவர்
நேயமாக்கஞ் சாவடித்து நேரபிணியைத் தின்பதால்
நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே       
     

காயகற்பம் உண்டு கல்ப தேகம் பெற்றதாக, கண்டவர்கள் மதிக்கும்படி சொல்லிக் கொள்வார்கள். கற்பத்தினால் மற்றவர் கண்களில் படாது மாயமாய் மறையலாம், ககன மார்க்கத்தில் எங்கும் பறந்து செல்லலாம் என்று ஜாலமாகிப் பேசி மோசமான காரியங்கள் செய்வார்கள். அன்பு மார்க்கத்தை சாகடித்து விட்டு எந்நேரமும் அபினியை காயகற்பம் என்று தின்பார்கள். அதனால் பைத்தியம் பிடித்து நாயைப் போல சாக்கடை நீர நக்கி குடித்து நாட்டில் அலைவார்கள்.            

***************************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்மனதிற்கு மகிழ்வாக இருக்கும். 
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை களை தொடர்ந்து, பாட்டுச் சித்தரின் அருளாசியுடன். ..அன்புடன் கே எம் தர்மா.
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!