Search This Blog

Jan 31, 2012

பன்னிரெண்டாம் திருமுறை: பெரிய புராணம் (பகுதி-2)


பன்னிரெண்டாம் திருமுறை: பெரிய புராணம் (இறுதிப் பகுதி)




பெரிய புராணம்:
முன்னுரை:
இப்பதிவு பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய சிறப்பிடத்தையும் தனித்தன்மை யையும் விரிவாக விளக்குகிறது. இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும் சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது. பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை இப்பதிவில் காணலாம். தொகையடியார், தனியடியார் ஆகியோரின் அறிமுகமும் இப்பதிவில் கிடைக்கிறது. 


சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில் இடம் பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வதையும் சமூக நோக்குடைய காப்பியமாக விளங்குவதையும் இப்பதிவு சுட்டிக் காட்டுகிறது. சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார், திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப் பெண் தொண்டர்களையும் இப்பதிவு அறிமுகம் செய்கிறது.
 
சைவத்திருமுறைகள் பன்னிரண்டில் நிறைவாக அமைந்திருப்பது பெரியபுராணம். இதனைத் திருத்தொண்டர் புராணம் என்றும், திருத்தொண்டர் மாக்கதை என்றும் கூறுவர். இதன் ஆசிரியர் சேக்கிழார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு, பெரிய புராணம் ஒரு பெருங்காப்பியமாக அமைக்கப்பட்டுள்ளது. 


கயிலாய மலை
4.2.3
திருமலைச் சருக்கம்:
பெரியபுராணத்தின் முதற் பகுதியாகிய திருமலைச் சருக்கம்:  1. பாயிரம்,  2. திருமலைச் சிறப்பு,  3. திருநாட்டுச் சிறப்பு, 4. திருநகரச் சிறப்பு, 5. திருக்கூட்டச் சிறப்பு, 6. தடுத்தாட் கொண்டபுராணம் என்ற ஆறு உட்பகுதிகளையும், 344 பாடல்களையும் கொண்டு நடையிடுகிறது. காப்புப்பகுதியில் முதல் இரண்டு பாடல்கள் தில்லைக் கூத்தனையும், மூன்றாவது பாடல் விநாயகனையும் வணங்குவதாக அமைந்துள்ளது.

இங்கிதன் நாமம் கூறின்
இவ்வுலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள்
சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப்
புறஇருள் போக்குகின்ற
செங்கதிரவன் போல் நீக்கும்
திருத்தொண்டர் புராணம் என்பாம்... (பெரியபுராணம் - 10)
(நாமம்-பெயர், கதிரவன்-சூரியன்) என்னும் பாடல் இந்நூல் பெயரைப் பதிவு செய்கிறது.

4.2.4
பெரியபுராணம் - பெயர்க்காரணம்:
காப்புப் பகுதியில் விநாயகர் வாழ்த்தில் எடுக்கும் மாக்கதைஎன்ற ஒரு தொடர் வருகிறது. மா-என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பெரிய என்பது பொருள். எனவே, மாக்கதை என்ற தொடருக்குப் பெருங்கதை என்று பொருள் கொண்டிருக்கலாம். முன்னரே தமிழில் பெருங்கதை என்ற ஒரு நூல் இருப்பதால், இதனை வேறுபடுத்தி அறிவதற்குப் பெரியபுராணம் என்று இந்நூலை முன்னோர் அழைத்திருக்கலாம்.     அவையடக்கத்தில்அளவிலாத பெருமையராகிய அளவிலா அடியார்என்ற ஒரு தொடர் வருகிறது. பெருமையர்என்ற சொல் பெருமை மிக்கவர், பெரியார் என அழைக்கப்பட்டு, பெருமை மிக்க அடியார் வரலாறு என்ற பொருளில் பெரியபுராணம் என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம். 
செயற்கரிய செயல் செய்தவர்களைத் திருவள்ளுவர் பெரியார்என்கிறார். நாயன்மார் வரலாற்றில் பலரும் செயற்கரிய செயல் செய்தவரே ஆவர். சேக்கிழாரும் பல இடங்களில் அடியார் செயல்களைச் செயற்கரிய செயல் என்று குறிப்பிட்டுள்ளார். அதுபற்றியும் பெரியபுராணம் என்ற பெயர் அமைந்திருக்கலாம்.

4.2.5
திருமலைச் சிறப்பு:
திருமலைச் சிறப்பில், கயிலாய மலையின் இயற்கை எழிலும், சிவ பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவோலக்கமும் (அமர்ந் திருக்கும் நிலை) சிறப்பிக்கப்பட்டுள்ளன. உபமன்யு முனிவர் சீடர்களுக்குச் சுந்தரர் வரலாறு உரைக்கும் போக்கில் காப்பியமும் இங்கேயே தொடங்கி விடுகிறது. காப்பிய நாயகர் பெருமையை,

தம்பிரானைத் தன் உள்ளம் தழீ இயவன்
நம்பி யாரூரன் நாம் தொழும் தன்மையன்... (29)
என்று உபமன்யு முனிவர் கூற்றாகச் சேக்கிழார் பதிவு செய்கிறார். கயிலையில் சுந்தரா காதல் வயப்பட, சிவபெருமான் அவரை நிலவுலகிற்குச் செல்லுமாறு பணித்தார். இதனால் தென் தமிழ்நாடு அடியவர் பெருமை அறிந்து மகிழும் பேறு பெற்றது என்கிறார் சேக்கிழார். இதனை அவர்,

மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்
போதுவான் அவர் மேல் மனம் போக்கிடக்
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்... (35)  எனக் காப்பிய நுட்பமும், நயமும் தோன்றக் குறித்துக் காட்டுகிறார்.

4.2.6
திருக்கூட்டச் சிறப்பு: 
முதற் சருக்கத்தில் இடம் பெற்றுள்ள திருக்கூட்டச்சிறப்பில் சைவ அடியார்களின் அளவற்ற பெருமைகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.     சைவ அடியார்கள் புறத்தூய்மையும், அகத் தூய்மையும் மிக்கவர்கள் என்பதை,
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்... (141) 
என்றும், அன்னார் இன்ப துன்பங்களால் பாதிப்பு அடையாமல், பொன் பொருள்களில் நாட்டம் இல்லாதவர்கள் என்பதனை

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்... (143) (ஆக்கம் = செல்வம் ; ஒக்கவே = ஒன்றாகவே, விறலின் = பெருமையின்) என்றும், அடியவர் தம் அகம் மற்றும் புறத்தூய்மைகளை,

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலது ஒன்றிலர்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலர்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ... (144)  என்றும் சேக்கிழார் இனங்காட்டிப் பெருமை சேர்க்கிறார். (ஆரம் = கழுத்தில் அணியும் அணிகலன், கண்டிகை = உருத்திராக்கம், பாரம் = சுமை, இங்கே கடமை).

4.7
பெரியபுராணம் - சமூகநோக்கு:
எந்த ஒரு காப்பியமும் சமூகப்பயன்பாடு கொண்டதாக அமைய வேண்டும். அது தோன்றிய காலத்தில் நிலவியிருந்த சமூக அநீதிகளைக் கண்டித்து எதிர் நீச்சல் அடிக்கும் துணிவு காப்பியப் படைப்பாளிக்கு வேண்டும். அத்தகு காப்பியங்களே சமூகத்தில் நின்று நிலவும். சாதி - பேதங்களும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஆண்டான் - அடிமைச் சமூக அமைப்பும் நிலவியிருந்த காலம் சேக்கிழார் காலம். இயன்ற வரை சமய மரபுகளுக்கு மாறுபடாமல் சமூகத்தை நெறிப்படுத்த அவர் அரிய முயற்சி மேற்கொண்டிருந்தமையை உணர முடிகிறது.

முடியாட்சிக்காலத்தில் - மன்னனின் நியாயமற்ற அழைப்பை ஏற்க மறுத்து - ‘நாமார்க்கும் குடியல்லோம்’ (அப்பர்) என்று வீறு கொள்ளும் உரிமை முழக்கம் அங்கே கேட்கிறது. ஆட்சியில் தவறு நிகழுமானால் - அடியார்க்குத் தீங்கு நேருமானால் - அரசனின் பட்டத்து யானையையும், பாகனையும் கொல்ல முடியும் என்பதை எறிபத்தர் வீரத்தில் காண முடிகிறது.  
காந்தியடிகளுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே உண்ணா நோன்பையும், தனி மனித சத்யாக்கிரகத்தையும் நாவரசர் மேற் கொண்டமை தெரிகிறது. கோயில் பூசை செய்யும் சிவாசாரிய மரபில் வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், கணிகையர் குலத்தில் வந்த பரவையாரையும் வேளாளர் குலத்தில் பிறந்த சங்கிலியாரையும் கலப்பு மணம் புரிகிறார். இறைவனும் இதற்குத் துணை நிற்கிறான்.

நந்தனார் வரலாறு அக்காலத்தில் ஆதி திராவிடர்கள் சிவாலயங்களுக்குள் சென்று வழிபடத் தடை இருந்தமையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் திருஞானசம்பந்தராகிய வேதியர், தம் தேவாரப் பனுவல்களுக்கு இசைகூட்டி யாழ் ஒலி எழுப்ப, திருநீல கண்ட யாழ்ப்பாணர் என்ற கீழ்க் குடியில் வந்த அன்பரைத் திருக்கோயில் கருவறை வரை அழைத்துச் செல்கிறார். திருநீல நக்கர் தம் இல்லத்தில் வேள்வி மண்டபத்தில் கணவன் மனைவியாகப் பாணர் தம்பதியர் இரவில் படுத்து உறங்க அனுமதிக்கிறார். 
வணிகர் மரபில் வந்த சிவநேசர் தம் மகள் பூம்பாவையை வேதியர் குலத்து வந்த திருஞான சம்பந்தருக்கு மணம் முடிக்க விரும்பியிருந்தார் என்று தெரிகிறது. பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில், உலகத்தார் பார்வையில் வாழ்வை இழந்தவராகத் தோற்றம் தந்த திலகவதியார், திருநீறு வழங்கித் தம்பியாரை மதமாற்றம் செய்து சைவத்திற்கு மீட்டுள்ளார். ஒரு மடாதிபதிக்கு உரிய உரிமை ஒரு பெண்ணுக்குச் சேக்கிழாரால் வழங்கப்படுகிறது.

4.7.1
ஆட்சியாளர் திறம்:
கல்தேர்:
நாடாளும் மன்னர்கள் நெறி திறம்பாது ஆள வேண்டும் என்பது முதலமைச்சராக இருந்த சேக்கிழார் விருப்பமாக அமைந்திருக்கிறது.  மனு நீதிச் சோழன் வரலாறு நாடாள்வோர் மனு நீதியினும் மேம்பட்ட நீதி வழங்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. பசுவின் கன்று தேர்க்காலில் அடிபட்டு இறந்தமைக்குப் பிராயச்சித்தம் போதும் என்று அமைச்சர்கள் கூறினர். மன்னன் ஒப்பவில்லை. 
கன்றை இழந்த பசுவின் துயரை, நான் என் மகனை இழந்து நின்று பெறுவதே அரச நீதி என்று மனுச்சோழன் கருதி, மகனைத் தேர்க்காலில் கிடத்தித் தேர் ஊர்ந்து நீதி செய்கிறான். தம் பட்டத்து யானை இழைத்த தவறுக்காக அதனைக் கொன்றது போதாது, யானைக்கு உரியவனாகிய என்னையும் கொல்ல வேண்டும் என்று கூறிய புகழ்ச்சோழன் கற்பார் நெஞ்சில் இடம் பிடிக்கிறான். முடியாட்சிக்காலத்திலேயே இத்தகைய அரசர் வரலாறுகளைச் சேக்கிழாரால் மட்டுமே பாட முடிந்திருக்கிறது.

4.8
தொகுப்புரை:
பெரியபுராணம் பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாக அமைக்கப்பட்டிருந்த போதும், அது தனித்தன்மை உடையது என்பது இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டது. இறைவனுக்கு இணையாக இறையருள் பெற்று மனித குலத்திற்குத் தொண்டு செய்யும் மனிதர்களும் போற்றவும் வணங்கவும் பட வேண்டும் என்பதைப் பெரியபுராணம் வற்புறுத்துகிறது. சாதிகளால் பிரிவுண்டு பிளவுபட்டு நின்ற மனித குலத்தை, ஒரு சமயத்தை மையப்படுத்தி ஒன்று படுத்த இயலும் என்பதைப் பெரியபுராணம் காட்டுகிறது. 
முடியாட்சிக்கு எதிரான தனிமனித உரிமைப் போராட்டத்திற்கும் இங்கே கால்கோள் விழா நடத்தப்பட்டுள்ளது. பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் உள்ளார்ந்த முயற்சியில் சேக்கிழார் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்கள், தெய்வங்களோடு திருக்கோயிலுக்குள் திருவுருவமாக எழுந்தருளிப் பெருமை பெற இயலும் என்பதை இந்நூல் துணிவுடன் பறைசாற்றுகிறது. தமிழர் வாழ்வில் இந்நூல் ஏற்படுத்தியிருக்கும் பெரும்தாக்கம் நீள நினைந்து போற்றப்பட வேண்டியது.

இப்பதிவில் நாம் அறிந்து கொண்டது:
1. பெரியபுராணத்தில் விரித்துரைக்கப்படும் திருஞான சம்பந்தர் வரலாற்றின் பாடல் தொகை எத்தனை?..  பாடல்தொகை - 1256.  
2. பெரிய புராணத்தில் வரும் கழறிற்றறிவார், திருநாளைப் போவார் என்பாரின் வழக்குப் பெயர்களைத் தருக....  1.சேரமான் பெருமாள் நாயனார் 2. நந்தனார். 
3. சிவலிங்கம் இறை நிலையில் எவ்வகையைச் சார்ந்தது?...  அருவுருவ நிலை. 
4. சேக்கிழார் குறிக்கும் சிவன் அருட்செயல்கள் குறித்த இருதொடர்களை எழுதுக: 1. அடியார் இடுக்கண் தரியாதார், 2. எவ்வுயிர்க்கும் தாயினான். 
5. பெரியபுராண வரலாற்றுப் பதிவுகளில் இரண்டினைக் குறிக்கவும்....  1. ஆதித்த சோழன் தில்லை அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தது, 2. காஞ்சிபுரத்தைக் கரிகால் பெருவளத்தான் புதுக்கியது
=================================================================
முனைவர். இரா. செல்வக் கணபதி அவர்களின் விளக்க உரையுடன் மேலும் பயணிப்போம் பன்னிரு திருமுறைகளின் ஊடாக !!! அன்புடன் கே எம் தர்மா...